Search

வருமான வரி ரிட்டன் சரிபார்ப்பை வரி செலுத்துவோர் முடிக்க செப்டம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம் -வருமான வரித் துறை உத்தரவு

Wednesday 15 July 2020

செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வருமான வரி ரிட்டன் சரிபார்ப்பை வரி செலுத்துவோர் முடிக்க வேண்டும் என்று வருமான வரித் துறை உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக, வரி செலுத்துவோர் தங்களது வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்த அடுத்த 120 நாட்களுக்குள் அந்த வரித் தாக்கல் விவரங்களை சரிபார்ப்பு (Verification) செய்திருக்க வேண்டும். ஏதேனும் விதிவிலக்கு அல்லது அரசு தரப்பிலிருந்து கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தால் மட்டுமே இதில் வரி செலுத்துவோருக்கு அவகாசம் வழங்கப்படும். இந்நிலையில் தற்போது, 2015-16 முதல் 2019-20 ஆண்டு வரையிலான காலத்துக்கு வரி ரிட்டன்களை சரிபார்ப்பு செய்வதற்கான காலக் கெடு செப்டம்பர் 30ஆம் தேதி நிறைவடைவதாக வருமான வரித் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மின்னணு வாயிலாக தாக்கல் செய்யப்பட்ட வரி ரிட்டன்கள் அதிகமான அளவில் வரித் துறையிடம் நிலுவையில் இருப்பதாகத் தகவல் வந்துள்ளது. அந்த வரி ரிட்டன்களுக்கான ஐடிஆர்-வி படிவங்கள் பெங்களூரு அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். சட்டப்படி இதில் தாமதம் ஏற்பட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். செப்டம்பர் 30ஆம் தேதி வரையில் மட்டுமே கால அவகாசம் உள்ளது. கால அவகாசத்துக்குள் சரிபார்ப்பு செய்யப்படாத ரிட்டன்கள் தாக்கல் நிராகரிக்கப்பட்டுவிடும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக, நிதியாண்டுக்கான வரி ரிட்டன்களுக்கான கோரிக்கைப் படிவங்கள் அவர்களின் கையொப்பத்துடன் பெங்களூருவில் உள்ள மத்திய செயல்பாட்டு மையத்துக்கு அனுப்பப்பட வேண்டும். அங்கு அவை சரிபார்க்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும். அல்லது மின்னணு மூலமாக சரிபார்ப்புக்கு அனுப்பப்படுவதாக இருந்தால் வரி செலுத்துவோரின் ஆதார் ஓடிபி, நெட் பேங்கிங், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்டவை மூலமாக செயல்படுத்தப்படும். இவ்வாறு சரிபார்ப்பு செய்யப்பட்டுவிட்டால் அந்த வரி செலுத்துவோர் தான் வழங்கிய விவரங்கள் அனைத்தும் உண்மையானவை என்று உறுதியளிக்கப்படுகிறது.

தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில் வரி செலுத்துவோருக்கு இந்த அறிவிப்பை வருமான வரித் துறை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருந்த அறிவிப்பில், 2019-20ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டன் தாக்கலுக்கு நவம்பர் 30ஆம் தேதிவரை காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல, வரி தணிக்கைக்கான காலக்கெடு அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One