Search

ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராவது எப்படி?

Sunday 20 January 2019


மூன்று முக்கிய கட்டங்கள்
ஐ.ஏ.எஸ். முதல்நிலைத் தேர்வு எழுதுவோர் கவனத்துக்கு
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் எனப்படும் யு.பி.எஸ்.சி. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.,ஐ.ஆர்.எஸ். போன்ற குடிமைப் பணிகளுக்காக, ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகளை நடத்துகிறது. இதில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது. ஆனால் இந்தப் போட்டித்தேர்வுகளில் ஒருசிலரால் மட்டுமே வெற்றிபெற முடிகிறது. அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில் இந்தப் போட்டித்தேர்வில் வெற்றிபெறுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
இந்தத் தேர்வுக்குத் தயாராவது எளிதல்ல என்றாலும், முறையாகத் திட்டமிட்டு குறிக்கோளுடன் செயல்பட்டால் வெற்றி பெறுவது நிச்சயம்.

மூன்று முக்கிய கட்டங்கள்
ஐ.ஏ.எஸ். தேர்வு  3 கட்டமாக  நடத்தப்படும். முதல் கட்டம் பிரிலிமினரி தேர்வு, அதாவது, முதல்நிலைத் தேர்வு. இரண்டாவது கட்டம் மெயின் தேர்வு, அதாவது, முதன்மைத் தேர்வு. மூன்றாவதாக இன்டர்வியூ எனப்படும் பெர்சனாலிட்டி டெஸ்ட் எனப்படும் நேர்முகத் தேர்வு. முதலில் முதல்நிலைத் தேர்வு. இதில் இரண்டு பேப்பர் உள்ளது.

ஒன்று பொது அறிவுத் தாள் மற்றொன்று ‘சிசாட்’ என்கிற திறனறி தேர்வு. இந்த இரண்டு தாள்களுக்கும் வெவ்வேறு விதமான அணுகுமுறை மிகவும் முக்கியம். உதாரணமாக ஜெனரல் ஸ்டடீஸ் எனப்படும் பொது அறிவுத் தாளுக்கு ‘பிரிப்பரேஷன்’ மிக முக்கியம். ஏனென்றால், அதில் உங்கள் பொது அறிவு சோதனை செய்யப்படும். ‘சிசாட்’ என்பது உங்கள் வேகம் மற்றும் துல்லியத்தை சோதனை செய்யும் தாள்.

இந்த இரண்டிலும், மிக மிக முக்கியமான தாள் என்றால் ஜெனரல் ஸ்டடீஸ் எனப்படும் பொதுஅறிவுத் தாள்தான். ‘சிசாட்’ தாள் வெறும் தகுதித்தாள் மட்டும்தான். அதில் குறைந்தபட்சம் தகுதி மதிப்பெண்களை எடுத்தாலே போதுமானது. எனவே, முதல்நிலைத் தேர்வில்  ஒருவருடைய வெற்றியைத் தீர்மானிப்பது பொது அறிவுத் தாள்தான். அதில் ஒருவர் எவ்வளவு மதிப்பெண் எடுக்கிறார் என்பதுதான் வெற்றியைத் தீர்மானிக்கும்.

முதல்நிலைத் தேர்வின் பொதுஅறிவுத்தாளில் கேட்கப்படும் கேள்விகளை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துக்கொள்ளலாம். ஒன்று கன்வென்ஷனல் என்று சொல்லப்படும் மரபு சார்ந்த பகுதிகளான வரலாறு, புவியியல், அரசியலமைப்பு, பொருளாதாரம் போன்ற பகுதிகள். மற்றொன்று நடப்பு நிகழ்வுகள் (Current Affairs ). இந்த இரண்டில் இருந்தும் 100 கேள்விகள் கேட்பார்கள். இந்த இரண்டு பிரிவுக்கும் தேர்வர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். முதலில் ஒரு மாணவர்  NCERT புத்தகங்களிலிருந்து தொடங்க வேண்டும்.

அதாவது, சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான புத்தகங்களை முழுமையாகப் படிக்க வேண்டும். அதில்தான், ஒவ்வொரு பாடப்பிரிவிலிருந்தும் தேர்வுக்குத் தேவையான அடிப்படை அறிவு கிடைக்கும். அறிவியலுக்கு மட்டும் 12ம் வகுப்பு வரை  புத்தகங்கள் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சமூக அறிவியலுக்கு புத்தகங்கள் 6 முதல் 12ம்  வகுப்பு வரையிலான  NCERT புத்தகங்களைக் கட்டாயம் ஒரு மாணவர் படிக்க வேண்டும்.

அடுத்து, ‘கரன்ட் அஃபையர்ஸ்’ என்று சொல்லக்கூடிய நடப்பு நிகழ்வுகள் பகுதிக்கு ஏதாவது ஒரு தரமான ஆங்கிலம் மற்றும் தமிழ்ச் செய்தித்தாளைத் தினமும் இரண்டு முதல் மூன்று மணி நேரம் கட்டாயம் படிக்கவேண்டும். குறிப்பாகத் தலையங்கங்களைத் தவறவிட்டுவிடக்கூடாது. இதுதவிர, தேசிய அளவில் தரமான நியூஸ் சேனல் மற்றும் அதில் விவாதிக்கப்படும் சமூக பொருளாதார விவகாரங்களை உள்வாங்குதல் போன்ற செயல்பாடுகள் நடப்பு நிகழ்வுப் பகுதியில் கேட்கப்படும் கேள்விகளை எதிர்கொள்ள உதவும்.

நடப்பு நிகழ்வுகளுக்கு மேற்சொன்னவை மட்டுமின்றி மத்திய அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருதலும் அவசியம். ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெறப் பொதுவாக எவ்வளவு நேரம் படிக்க வேண்டும் என்று பெரும்பாலானவர்கள் கேட்பதுண்டு. சிலர் 18 மணி நேரம் படிக்க வேண்டும், சிலர் 15 மணி நேரம் படிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்வார்கள்.

இது எல்லாமே ஒப்பீட்டளவிலான வார்த்தைகள்தான். அதாவது, 18 மணி நேரம் கட்டாயம் படித்தால்தான் ஐ.ஏ.எஸ். ஆக முடியும் என்பதெல்லாம் கிடையாது. சில நேரங்களில் சிலபேர் 5 மணி நேரம் படித்துகூட ஐ.ஏ.எஸ். ஆகியிருக்கிறார்கள். 18 மணி நேரம், 10 மணி நேரம், 5 மணி நேரம் என்பது எல்லாமே நபருக்கு நபர் வேறுபடும். நாம் எவ்வளவு நேரம் படிக்கின்றோம் என்பது முக்கியமல்ல. எப்படிப் படிக்கின்றோம், எதைப் படிக்கின்றோம் என்பதுதான் முக்கியம்.

பொதுவாக முதற்கட்ட தேர்வான முதல்நிலைத் தேர்விற்கு ‘எக்ஸ்டென்சிவ் ரீடிங்’ என்று சொல்லக்கூடிய பரந்துபட்ட வாசிப்பு மிகவும் முக்கியம். ஆனால், இரண்டாம் கட்ட தேர்வான முதன்மைத் தேர்வுக்கு ‘எக்ஸ்டென்சிவ் ரீடிங்’கை விட ‘இன்டென்சிவ் ரீடிங்’ மிக மிக முக்கியம். அதாவது, ஆழ்ந்து படிக்கக்கூடிய தன்மை. எந்த ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் ஆழ்ந்து அலசி ஆராய்ந்து படிக்கவேண்டும்.

இன்னொரு முக்கியமான, மிகவும் அவசியமான தேவை என்னவென்றால், அது முதல்நிலைத் தேர்வென்றாலும் முதன்மைத் தேர்வென்றாலும் நடப்பு நிகழ்வை கன்வென்ஷனல் பாடங்களுடன் தொடர்புபடுத்தி படிக்கும் திறமை. எல்லோருமே வரலாறு, புவியியல், அரசியலமைப்பு, பொருளாதாரம் போன்ற பகுதிகளையும் நடப்பு நிகழ்வையும் படிப்பார்கள். ஆனால், எவர் ஒருவர் நடப்பு நிகழ்வை வரலாறு, புவியியல், அரசியலமைப்பு போன்ற பகுதிகளுடன் தொடர்புபடுத்தி படிக்கின்றாரோ அவரே வெற்றியாளர் ஆகிறார். நடப்பு நிகழ்வில் மேற்சொன்னவாறு வரலாறு, புவியியல், அரசியலமைப்பு ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தியோ அல்லது நேரடியாகவோ கேள்விகள் கேட்கலாம்.

மொத்தத்தில் 100 கேள்விகளில் கிட்டத்தட்ட 50 கேள்விகளுக்கு மேல் நடப்பு நிகழ்விலிருந்து கேட்கப்படும். அடுத்து முதன்மைத் தேர்வு. இது ஐ.ஏ.எஸ். தேர்வின் முக்கியமான இரண்டாவது கட்டம். இந்தத் தேர்வுக்குக் கடுமையாக உழைக்க வேண்டும். ஏனென்றால், இதில் 4 பொது அறிவுத் தாள் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் 250 மார்க்குகள். அது மட்டுமல்லாமல் ஒரு விருப்பப் பாடமும் இருக்கும். இதில் 26 சப்ஜெக்ட்ஸ் உள்ளன. இதில் ஏதாவது ஒன்றை நாம் தேர்வு செய்து கொள்ளலாம். நாம் என்ன டிகிரி படித்துள்ளோமோ அதற்கு எந்தவிதத்திலும் தொடர்பு இல்லாத சப்ஜெக்டைகூட ஒருவர் தேர்வு செய்துகொள்ளலாம். மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்திருந்தாலும், புவியியலை விருப்பப் பாடமாக எடுத்துக் கொள்ளலாம்.

அந்த விருப்பப்பாடத்தில் இருந்து 500 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் கேட்கப்படும். இதற்கு ‘இன்டென்சிவ் ரீடிங்’ மிக மிக முக்கியம். சிலபஸில் இருக்கக்கூடிய ஒவ்வொரு வார்த்தையையும் கவனத்தில் நிறுத்தி தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். பிரிலிமினரி தேர்வு முடிந்தவுடன் உடனடியாக மெயின் தேர்வுக்குத் தயாராக வேண்டும். அதில் ஒருவர் தேர்வுக்கான தயாரிப்பை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

மெயின் தேர்விலுள்ள நான்கு பொது அறிவுத் தாளில் எந்த அளவுக்கு மதிப்பெண்களைக் குவிக்கின்றோம் என்பது நாம் என்ன மாதிரியான விருப்பப்பாடத்தைத் தேர்வு செய்துள்ளோம் என்பதைப் பொறுத்தது. அதனால் ஒரு மாணவர் விருப்பப்பாடத்தைத்  தேர்வு செய்யும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

ஐ.ஏ.எஸ். முதல்நிலைத் தேர்வு எழுதுவோர் கவனத்துக்கு
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட அரசு உயர் பதவிக்கான முதல்நிலைத் தேர்வு எழுதுவோர், அதற்கான அனுமதி அட்டையை முன்னதாகவே, இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி யு.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு முறையும் அறிவிப்பு வெளியிடுகிறது.

கடைசிநேர நெரிசலைத் தவிர்க்க முன்னதாகவே பிரின்ட் செய்து, அதில் ஏதாவது தவறு இருந்தால், உடனடியாகத் தேர்வாணையத்தின் பார்வைக்குக் கொண்டு வர வேண்டும். தேர்வறையில் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை குறித்த அறிவுரைகள் அடங்கிய பக்கத்தையும் முழுமையாகப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். விடைத்தாளில் தேர்வு எண் உள்ளிட்ட விவரங்களில், ஏதாவது தவறு இருந்தால் அந்த விடைத்தாள் நிராகரிக்கப்படும். தேர்வு எழுத வரும்போது மொபைல்போன், லேப் - டாப், கால்குலேட்டர் போன்ற மின்னணு சாதனங்களை எடுத்து வரக்கூடாது. அவ்வாறு எடுத்து வந்தால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விவரங்களுக்குத், தேர்வாணையத்தின் www.upsconline.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
Read More »

குடிமைப்பணி தேர்வில் கட்டுரை வரைதல்


நோக்கம்
கட்டுரை வரைவது ஒரு கலை. அது எழுதுபவரின் எழுத்து மூலமான வெளியீட்டு ஆற்றலின் அளவுகோல் எனலாம். அதனால் தான் இந்த அளவுக் கருவியை மத்தியப் பணியாளர் தேர்வு வாரியம் குடிமைப்பணி ஆர்வலரின் எழுத்தாற்றலைச் சோதிக்கும் கருவியாக்கியுள்ளனர். தேர்வுக்குத் தயாரிக்கும் போது ஆழ்ந்தும், அகன்றும் கற்றவற்றைக் கோர்வைப்படுத்தி தர்க்க ரீதியாக எடுத்துரைக்கும் ஆற்றலுக்கும் மொழிப் புலமைக்கும் ஒருசேர்ந்த ஒரு சோதனையாகக் கட்டுரை கேள்விகள் இடம் பெறுகின்றன. கட்டுரை வரைதல் என்பது மாணவர்கள் சிறு வயது முதலே குறைந்தது இரு மொழிகளில் பள்ளிகளில் பயின்று பயன்படுத்திய ஒன்றுதான். எனினும் குடிமைப் பணித் தேர்வில் எழுதும் கட்டுரைகள் கல்வி நிறுவனங்களில் எழுதியவற்றை விட மாறுபட்டவை. இங்கே ஆர்வமாகப் படித்தல், தகவல் குறித்து அழுத்தமான நோக்கு ஆகியவற்றுடன் கருத்துக்களை விவரங்களை சுருக்கமாக, கோர்வையாக மூன்று மணி நேரம் எழுதும் திறன் ஆகியன முக்கியத்துவம் பெறுகின்றன.

பகுப்பாய்ந்து, ஆழமாகப் புரிந்துள்ளனரா என்பதை அறிவது இக்கட்டுரைத்தாளின் நோக்கம் போலத் தோன்றுகிறது. 1993-ம் ஆண்டு முதல்தான் குடிமைப் பணித் தேர்வுகளில் கட்டுரை வரைதல் இடம் பெறுகிறது.

எழுத்தாற்றல் ஆங்கில மொழியில்தான் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. ஆதலால் சதிஷ் சந்திரி குழு கட்டுரையை ஆங்கிலம் தவிர அரசியல் சட்டத்தின் 8-வது பட்டியலில் இடம் பெறும் எந்த ஒரு மொழியிலும் எழுதலாம் எனப் பரிந்துரை செய்தது. பிரதான தேர்வை எழுத ஒருவர் தெரிந்தெடுக்கும் மொழியில் தான் கட்டுரைத் தாளையும் எழுத வேண்டும்.

இந்த கட்டுரை எழுதும் தேர்வுத் தாளுக்கு 200 மதிப்பெண் எனவும் வரையறை செய்யப்பட்டது. கட்டுரை எழுதுதல் தொடர்பாக மத்தியப் பணியாளர் தேர்வாணையம் 2013-ம் ஆண்டு முதல் அமல்படுத்தும் புதிய நெறிமுறைகள் இதற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை விளக்குகிறது. 3 மணி நேரம் எழுத வேண்டிய இந்த கட்டுரை கேள்வியின் மதிப்பெண் 200- லிருந்து 250-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கட்டுரைத் தேர்வின் விடைத்தாள்கள் ஒரே சீராக மதிப்பீடு செய்ய சில யோசனைகளை வழங்கி உள்ளது. அவை வருமாறு 1. பொருளைப் புரிந்து கொண்டமை 2. சொந்த சிந்தனை ஓட்டம் 3. தெளிவான கருத்து வெளியீடு (ஒருங்கிணைந்த சிந்தனையும் கருத்து ஒற்றுமையும், கண்டறிய கட்டுரையை இரண்டு தேர்வாளர்கள் மதிப்பீடு செய்வர். இவர்கள் இருவரும் அளித்த மதிப்பெண்களின் சராசரியே தேர்வரின் மதிப்பெண் ஆகக் கொள்ளப்படும்.)

திறம்மிக்க, தெளிவான சுருக்கமான கருத்து வெளியீட்டுக்கு நல்ல மதிப்பெண், மதிப்பீடு கட்டாயம் கிடைக்கும். விடைத்தாளில் ஒரு தலைப்பு பட்டியல் இடம் பெறும். இவற்றில் ஒன்றன் மீது கட்டுரை வரையவேண்டும். பட்டியலில் 6 முதல் 8 தலைப்புகள் வரை இடம்பெறுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இப்பட்டியலில் 4 தலைப்புகளே இடம் பெறுகின்றன.

எனவே தலைப்பு எத்தனை என்பது குறிப்பிட இயலாது. எனினும், பொதுவான தேர்வுகள் செய்யுமளவு எண்ணிக்கையில் அவை இருக்கும் என நம்பலாம். கட்டுரை எழுதுவதற்கான சில பயனுள்ள குறிப்புகள் கவனமாக ஆராய்ந்த பிறகே எந்த தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும்.

கட்டுரையில் இவ்வளவு வார்த்தைகள் இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற வரையறை ஏதும் இல்லை. கட்டுரையை பொதுவாக நான்கு பகுதிகளாக வகுத்துக் கொள்ளலாம்.

முகவுரை
வரலாறு
பொருளடக்கம்
முடிவுரை
முகவுரை என்பது மிகவும் முக்கியமானது. நல்ல தொடக்கமே பாதி முடிந்ததற்கு சமமாகும். இது கட்டுரை எழுதுவதற்கு மிகுந்த பொருத்தமானது என்றால் அது மிகையல்ல. கவனத்தை ஈர்க்கும் சவாலான தொடக்கங்கள் உரிய பலனைத் தரும். எனினும், கவனமுடன் கையாளப்பட வேண்டியவை. முகவுரையைத் தொடர்ந்து தலைப்பின் வரலாறும் அது சார்ந்த வளர்ச்சியும் இடம்பெற வேண்டும். இந்த வரலாற்றுப் பகுதி தேர்வாளரின் தலைப்பு பற்றிய ஆழ்ந்த அறிவை வெளிப்படுத்துவதுடன், அவர் இது பற்றிய ஒரு முடிவுக்கு வரக்கூடிய தகுதி பெற்றவர் என்பதை பறைசாற்றுவதாகவும் அமையும். கட்டுரையின் பிரதான பாகத்துக்கு வரும்போது ஒவ்வொரு பத்தியிலும் ஒரு முக்கியமான விஷயம் இடம் பெற்றிருக்க வேண்டும். ஒரு பத்தியில் இடம்பெற்ற விஷயம் வேறு ஒரு பத்தியில் மீண்டும் இடம் பெறாததை உறுதி செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு மீண்டும் மீண்டும் இடம் பெற்றால் கட்டுரையின் சுவாரசியத்தை அது குறைத்திடும். இடம் பெறும் முக்கிய விஷயங்களுக்கு இடையே தொடர்பு இணைப்புக்களைப் பராமரிக்க வேண்டும்.

வாக்கியங்கள் சிறியதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளும் அதே நேரத்தில் குறைந்தபட்ச அளவிலேயே இணைப்புச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும். கட்டுரையில் பிரச்சினைக்குரிய விஷயங்கள் எவை என்பதுடன், அவற்றிற்கான தீர்வுகளும் இடம்பெற வேண்டும். முகவுரையைப் போலவே முடிவுரையும் முக்கியமானது. முடிவுரையில் கட்டுரையின் முழு சாராம்சத்தையும் தெரிவிக்க வேண்டும். கட்டுரை என்கிற சிறகடித்த எண்ணப் பறவைகளை அழகாக, ஆணித்தரமாக, பத்திரமாக தரையிறங்கச் செய்வது முடிவுரையின் ஒரு நோக்கம் என்பதை மறக்க வேண்டாம். கருத்தாழமும் அவற்றின் கோர்வையான அமைவும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியத்துவம் மொழிநடைக்கும் உண்டு.

வார்த்தைத் தெளிவு, வாக்கிய நீளம் ஆகியவற்றுடன் சில சந்த அமைப்பு முறைகள் கொண்ட மொழிநடை சாலச் சிறந்தது. உரைநடைக்கு ஏன் எதுகையும், மோனையும் என்று எண்ணாமல் இவை இயல்பாக வந்து வாய்க்கும் வகையில் பயிற்சி பெற வேண்டும். பயிற்சி எல்லாத் தேர்வுகளையும் போல கட்டுரைத்தாள் தேர்வுக்கும் மிக அவசியமானது. எவை எல்லாம் இடம் பெறும் என எதிர்பார்க்கும் தலைப்புகளைத் தொகுத்து அவற்றில் ஏதாவது நான்கு அல்லது ஐந்து தலைப்புகளை குடவோலை முறையில் தேர்வு செய்து 3 மணிநேர மாதிரித் தேர்வு எழுதுவதே சிறந்த பயிற்சியாக அமையும். சொந்தமாகவோ, தெரிந்த பேராசிரியப் பெருமக்கள், பயிற்சியாளரிடமோ இவற்றை மதிப்பீடு செய்யலாம். நெறிமுறைகளின்படி இந்த மதிப்பீட்டைச் செய்து பார்த்து பயனடையலாம்.

கட்டுரை வகைகளும், தலைப்புகளும்
கட்டுரைகள் பொதுவாக கீழ்க்கண்ட வகைப்படுகின்றன:

விளக்கக் கட்டுரைகள்
இயம்பல் அல்லது வர்ணனைக் கட்டுரைகள்
சிந்தனைக் கட்டுரைகள்
விளக்கக் கட்டுரை என்பவை பொருள், இடம், அமைப்பு ஆகியன பற்றி விளக்கிக் கூறுவன.

வரலாற்று நிகழ்வுகள், சமுதாய, அறிவியல், தனிநபர் நிகழ்வுகள் ஆகியவற்றை கால வரையறையுடன் இயம்புவர், வர்ணிப்பது இரண்டாவது வகை கட்டுரை ஆகும். கருப்பொருட்கள், பிரச்சினைகள், நிகழ்வுகள் குறித்த கருத்துக்களைச் சோதிக்கவே சிந்தனைக் கட்டுரைகள் கேள்வித்தாளில் இடம் பெறுகின்றன. குடிமைப் பணித்தேர்வின் கட்டுரைத் தாளில் இடம் பெறுபவை இத்தகைய கட்டுரைத் தலைப்புகளே ஆகும். தனது சிந்தனைகளை அறிவார்த்தமாகப் பகுத்தாய்ந்து தெளிவாக எடுத்துரைக்கும் வாய்ப்புகளே இத்தலைப்புகள் எனலாம்.

கடந்த கால கட்டுரைத் தேர்வுத் தாள் அடிப்படையில் பார்த்தால் தலைப்புகள்
1அறிக்கை அடிப்படையிலும்
பிரச்சினைகள் அடிப்படையிலும்
பெரிய தலைவர்கள் சீர்திருத்தவாதிகளின் சிந்தனை அடிப்படையிலும் இருப்பதைக் காணலாம்.
இவற்றில் சில உதாரணங்களை இங்கு காண்போம்.

அடிப்படையிலான தலைப்புகள்: நன்னெறிகளின் அடிப்படை இரக்க உணர்வே (1993) இளமை தவறுக்கும், நடுவயது போராட்டத்துக்கும், முதுமை மன வருத்தத்திற்கும் ஆனவை (1994)
பயனில்லா வாழ்க்கை, இளவயது மரணம் (1994) நோக்கமில்லா அறிவுத்தேடலே உண்மையான நாகரிகத்தின் உயிர்நாடி (1995)
நமது செயல்கள் நம்மை நிர்ணயிக்கின்றன. நமது செயல்களை நாம் நிர்ணயிப்பது போலவே (1995) உண்மை வாழ்ந்து கற்பது, சொல்லிக் கொடுத்து கற்பதல்ல (1996) உண்மை சமயத்தை தவறாகப் பயன்படுத்துவது இயலாது. (1997) பெண்ணே இறைவனின் தலைசிறந்த படைப்பு (1998) மிகச் சிறந்தவற்றைத் தேடுதல்
(2002) நல்லதென்றும், தீயதென்றும் ஏதுமில்லை, நமது சிந்தனைதான் அவற்றை அவ்வாறு அமைக்கின்றன
சமீப காலமாக இத்தகைய தலைப்புகளில் கேள்விகள் கேட்பதில்லை. எனினும், கேட்கக் கூடாது என விதியும் இல்லை. ஆதலால் இவற்றுக்கும் தயாராகவே இருக்க வேண்டும்.

பிரச்சினை அடிப்படையிலான தலைப்புகள் : நாட்டிற்கு மேலும் சிறந்த பேரிடர் நிர்வாக அமைப்பின் தேவை (2000) ஆற்றல், அதிகாரமளித்தல் மட்டுமே நமது பெண்களுக்கு உதவ முடியாது (2001) இந்தியாவில் உயர்கல்வியை தனியார் மயமாக்கல் (2002) நவீன ஆதிக்கச் சக்திகளின் முகத்திரை (2003) சிறு தொழில்துறையில் உலக மயமாக்கலின் தாக்கம் (2006) பஞ்சாயத் ராஜ் (2007) உலக மயமாக்கலும், தேசிய மயமாக்கலும் (2009) படிங்குடியினப் பகுதிகளில் புதிய சுரங்கப் பணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள காலக்கெடு (2010) சிறிய மாநிலங்களை உருவாக்குதல் (2011) தனியார் பொதுத்துறை இணைந்த பங்கேற்பு (2012) இந்தத் தலைப்புகளில் கட்டுரை எழுதுவதற்கு அவை குறித்த முழுமையான அறிவு முதல் முக்கியப்படி. அரை வேக்காட்டு அணுகுமுறை இத்தலைப்புகளுக்கு ஒவ்வாதவை. இவற்றில் உங்கள் கருத்து உறுதியுடன் ஏற்புடைய வகையில் இயம்பப்பட வேண்டும். பெரிய தேசியத் தலைவர்கள் சிந்தனை அடிப்படை தலைப்புகள் : காந்திஜி வலியுறுத்திய சுதந்திரம், சுய ராஜ்யம், தர்ம ராஜ்யம் ஆகியவை இன்று பொருத்தமானவையா? (2002) இது புதுமையான தலைப்புதான். எனினும், பொதுப்படிப்பும், தேர்வின் வரலாற்றுப் பாடத்தினைத் தயாரிக்கும்போது பெற்றஅறிவைக் கொண்டு இத்தலைப்பில் எழுத முடியும். இந்த மூன்று பிரிவுகளைத் தவிர வேறு வகையான, இந்த பிரிவுகளுக்கு இடைப்பட்ட வகையிலும் கட்டுரைத் தலைப்புகள் கேள்வித்-தாளில் இடம் பெறலாம்.

இத்தகைய தலைப்பு-களை “விளக்குக” வகை எனப் பாகுபடுத்திக் கொள்வோம். உதாரணத் தலைப்புகள் நாம் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்ள வேண்டும் (2000) சிறந்த உலகப் போர் எப்படி இருக்க வேண்டும் (2001) நவீன தொழில்நுட்பக் கல்வியும் மனிதப் பண்புகளும் (2002) குடிமைப்பணி அதிகாரி எப்படிச் செயல்பட வேண்டும் ? (1993) இந்திய &- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் (2006) சமுதாயத்தில் செயற்கைக்கோள் தொலைக்காட்சியின் தாக்கம் (2007) பால்கன் மயமாக்கல் (2007) இந்திய சினிமா (2011) அறிவியலும், தர்க்கத் தத்துவமும் (2012) கட்டுரை விரிவாக்கத்துக்கு உதவும் குறிப்புகள் (உ&-ம்)

ஆலோசனைகள்
தலைப்பு தேர்வு செய்தல்

நீங்கள் தேர்வு செய்யும் தலைப்பு நீங்கள் படித்த பாடத்தினைச் சார்ந்ததாகவோ, அல்லது நீங்கள் ஆர்வம் கொண்டதாகவோ, அல்லது இரண்டும் சேர்ந்ததாகவோ இருத்தல் நன்று.

தலைப்பைப் புரிந்துகொள்தல்

உளவியல் ரீதியாகப் பார்த்தால் தலைப்பில் நீங்கள் தயார் செய்த பகுதிதான் கேட்கப்பட்டுள்ளதாக நினைக்க வாய்ப்பு உள்ளது. இது தவறாக, எதிர்பார்த்ததற்கு மாறாக இருந்தால் மதிப்பெண்கள் வராது. எனவே எச்சரிக்கையுடனும், திறந்த மனதுடனும் தலைப்பைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். கருத்துக்களை முறைப்படி அமைத்து வழங்குதல்-முறைப்படி அமைப்பது என்றால் பொதுவிலிருந்து சிறப்புக்கு அல்லது சிறப்பிலிருந்து பொதுவுக்கு அல்லது காலக்கிரயமாக எனப் பொருள்படும்.

கட்டுரை பொருளடக்கம்

முகவுரை  : சுருக்கமாக கட்டுரையின் 1/10 பங்கு அளவில் இருக்க வேண்டும். படிப்போரை வயப்படுத்துவதாக அமைய வேண்டும்.
வரலாறு : தலைப்பின் வரலாறும் அது சார்ந்த காலக்கிரயமான வளர்ச்சியும் இடம்பெற வேண்டும். இது உங்கள் தயாரிப்பின் ஆழ, அகலங்களை தேர்வாளருக்குத் தெரிவிக்கும் வாய்ப்பு என்பதை மறக்க வேண்டாம்.
உள்ளுரை - சுமார் 4 பத்திகள் இருக்கலாம். ஆனால் பொருள் விளங்க விரிவாக அமைய வேண்டும். உதாரணங்கள், புள்ளி விவரங்கள் இடம் பெறலாம். காரண, காரிய விளக்கங்களும் இடம் பெற வேண்டும்.
முடிவுரை : சுருக்கமான திறம்பட்ட வகையில் அமைய வேண்டும். உங்கள் விவாதச் சுருக்கமாகவோ அல்லது கட்டுரை உச்சக் கட்டமாகவோ அமையலாம்.
கவனத்தில் கொள்க: தலைப்பை ஒட்டியே கட்டுரை எழுதல் வேண்டும். தலைப்பை மறுத்து கட்டுரை எழுதுதல் கூடாது. உதாரணத்துக்கு, “உயிரிச் சமநிலை பாதுகாப்பு என்பது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை அல்ல” என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்து எழுதும் பொழுது, உயிரிச்சமநிலை பாதுகாப்பு, வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது என்ற வாதத்தைத் தப்பித்தவறிக்கூட வைக்கக்கூடாது.
அப்படிச் செய்தால் தலைப்பை நீங்கள் சரிவர புரிந்துகொள்ளவில்லை என்று அர்த்தமாகிவிடும். தலைப்பைச் சரிவர புரிந்துகொள்ளாமல் எழுதி கட்டுரைத் தாளில் பூஜ்யம் மதிப்பெண் பெற்றவர்களின் நிஜக்கதையும் உண்டு. கட்டுரை பத்தி பத்தியாகத் தான் எழுதப்பட வேண்டுமே அன்றி, தொடர்ச்சியாக எழுதக்கூடாது. கட்டுரையில் படம் வரைதலைத் தவிர்க்க வேண்டும்.
Read More »

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்வதற்கான சில யோசனைகள்


விண்ணப்பதாரர்கள், தங்களது பள்ளிப்பாடப் புத்தகங்களை முழுவதுமாக படிக்க வேண்டும். இது பொது அறிவு என்ற அடித்தளத்தை வலுவாக அமைத்திட உதவும். நாள்தோறும் ஏதாவது ஒரு தேசிய நாளேட்டைத் தொடர்ந்து படிக்கவேண்டும்,
போட்டித்தேர்வுக்கு பிரத்யேகமாக வெளியிடப்படும் மாத இதழ்களையும் படிப்பது அவசியம். தொலைக்காட்சிகளில், செய்திகள், விவாதங்கள், உரையாடல்கள் ஆகியவற்றை பார்த்து வர வேண்டும்.
படித்த செய்திகள், தொலைக்காட்சிகளில் பார்த்த செய்திகள், விவாதங்கள், உரையாடல்கள் குறித்த கருத்துக்களை நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
அகில இந்திய வானொலியின் காலை, மாலை செய்தி அறிக்கைகளை கேட்பது மிக மிக அவசியம். முக்கியமாக அகில இந்திய வானொலியின் இரவு 9 மணி செய்தியைத் தொடர்ந்து 9.16க்கு ஒலிபரப்பாகும் spot light என்ற நிகழ்ச்சியை கண்டிப்பாக பார்க்க வேண்டும். இந்த செய்தி அறிக்கைகள் தேசிய மற்றும் உலக அளவிலான அன்றாட நிகழ்வுகளை தெரிவிக்கக்கூடியது என்பதை மறுக்கக் கூடாது.
சில வேளைகளில் வானொலி செய்திகளை நேரலையில் கேட்க முடியவில்லை என்றால், அகில இந்திய வானொலியின் இணையம் மூலம் பார்க்கலாம்.
NCERT புத்தகங்கள் சிறிய கலைக் களஞ்சியம் போன்றது என்பதால், அந்தப் புத்தகங்களை மிகக் கவனமாக படிக்க வேண்டியது அவசியம்.
மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் புத்தக வெளியீட்டுப்பிரிவு வெளியிடும் இந்தியா இயர்புக், யோஜனா, குருக்க்ஷேத்திரா ஆகியனவும் படிக்க வேண்டும். இந்தப் புத்தகம் இந்தியா பற்றிய அனைத்து விவரங்களையும் முழுமையாக அறிந்து கொள்ள உதவிடும்.
பொது அறிவு பாடம் தொடர்பாக சில யோசனைகள்

பொது அறிவு பாடக் கேள்வித் தாளில் நடப்பு நிகழ்வுகள் மற்றும் பள்ளிப் பாடத்திட்டங்கள் தொடர்பான கேள்விகள் இடம்பெறும். 12ஆம் வகுப்பு வரை படித்த பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

பள்ளிப்படிப்பின்போது புத்திகூர்மை உடையவர்களாக இருந்தவர்கள் பொது அறிவுப் பாடத்தை எதிர்கொள்வதில் வலுவாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. பொது அறிவுப் பாடக் கேள்வித் தாளில் திட்டமிடுதல், பட்ஜெட் தயாரிப்பு, வளர்ச்சித் திட்டங்கள், சமீபத்திய அரசியல் சர்ச்சைகள், அரசியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள், பஞ்சாயத்ராஜின் தேர்தல் சீர்திருத்தங்கள், நாட்டின் இயற்கை வளங்கள், கலாச்சாரம், மத்திய அரசால் அமைக்கப்படும் குழுக்கள், ஆணையகங்கள் ஆகியன குறித்து ஒவ்வொரு ஆண்டும் கேள்விகள் கேட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதான தேர்வுகளில் பங்கேற்கும் பெரும்பாலானவர்கள் பரந்த அறிவுத்திறன் கொண்டவர்களாக இருந்தாலும், அவர்களின் எழுதும் திறமை குறைவாகவே இருக்கும். மதிப்பீட்டாளர்கள் எதிர்பார்ப்பதற்கு ஏற்ப அவர்களின் பதில் அமைந்திருக்காது. என்ன எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டியது அவசியம். எழுதும் திறமையை மேம்படுத்திக் கொள்ளவேண்டும்.

பாடங்களை படித்துவிட்டு தேர்வுகளை நேரடியாக எழுத முடியும் என்ற எண்ணம் விண்ணப்பதாரரிடம் குடியிருக்கக்கூடாது. வைரம் தீட்டத் தீட்ட அதிக ஒளிதருவது போல ஒவ்வொரு போட்டியாளரும் தொடர் எழுத்துப் பயிற்சி மூலம் தங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.

விண்ணப்பதாரர்கள் முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றிபெற்றுவிட்டால், அவர்கள் மத்திய அரசின் செயலர், ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலர், மத்திய அமைச்சரவையின் செயலர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு செல்ல முடியும்.

மத்திய அரசின் சிவில் சர்வீஸ் பணிகளைக் குறிப்பிடும்போது ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் பதவிகள் மற்ற எல்லா பதவிகளைக் காட்டிலும் சிறப்பு அங்கீகாரத்தைக் கொண்டவை என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.

விடாமுயற்சியும், விவேகமும் விக்கிர மாதித்தன் கதைகளின் மையக்கருத்து என்பதை மறுப்பதற்கில்லை. சிவில் சர்வீஸ் தேர்வுகளிலும் அணுகுமுறைதான் வெற்றியைத் தேடித்தரும்
Read More »

கலெக்டர் ஆவது எப்படி? (வழிகாட்டுதலும், ஆலோசனைகளும்)


ஆட்சியர் என்பதன் ஆங்கிலச் சொல்லே கலெக்டர் என்பது ஆகும். ஆட்சியர் (கலெக்டர்)  ஆக வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கனவு. கூடுதல் ஆர்வம், விடா முயற்சி, கடின உழைப்பு இருந்தால் கலெக்டர் ஆகலாம். இந்தியளவில் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வு, ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.

இதில் தேர்ச்சிபெறுபவர்கள் இந்திய ஆட்சிப் பணி, இந்திய அயல்நாட்டுப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வருவாய் பணி உள்ளிட்ட 24 உயர் பதவிகளில் பொறுப்பு வகிக்க முடியும். பிரிலிமினரி, மெயின், பர்சானலிட்டி அண்டு இன்டர்வியூ என யு.பி.எஸ்.சி.,. தேர்வு 3 கட்டமாக நடத்தப்படுகிறது. இத்தேர்வு எழுத பட்டப்படிப்பு முடித்திருக்கவேண்டும்.

பொதுப்பிரிவினர் 21முதல் 30 வயது வரையும், ஓ.பி.சி. பிரிவினர் 33 வயது வரையும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவத் தினர் 35வயது வரையும் தேர்வு எழுதலாம். மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை வயதில் தளர்வு அளிக்கப்படுகிறது. ஒருவர் நான்கு முறை தேர்வு எழுதலாம்.

O.B.C., S.C., ST பிரிவினர் ஏழுமுறை எழுதலாம். பிரிலிமினரி தேர்வு இரண்டு தாள்களை கொண்டது. முதல்தாள் பொதுஅறிவு , இரண்டாம்தாள் திறன் அறிவு. தலா 200 மதிப்பெண்கள். இரண்டாம் கட்டமாக நடத்தப்படும் மெயின் தேர்வு எட்டு தாள்கள் கொண்டது. கடந்த 2013-ம் ஆண்டு மெயின் தாளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, முதல் பிரிவு தகுதித் தேர்வாக நடத்தப்படுகிறது. இரண்டாம் பிரிவு ஏழு தாள்கள் கொண்டது. தகுதித் தேர்வு பகுதி – ஏ, பகுதி – பி என இருபிரிவாக நடத்தப்படுகிறது .

பகுதி-ஏ தேர்வு இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 8-ன் படி அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஏதாவது ஒன்றை தேர்வுசெய்து எழுதலாம். பகுதி-பி ஆங்கிலத்தில் எழுத வேண்டும். இவ்விரு தேர்வுக்கும் மதிப்பெண்கள் தலா 300. தகுதித் தேர்வின் மதிப்பெண்கள், சிவில்சர்வீஸ் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களுடன் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. மெயின்தேர்வு இரு பிரிவுகளை கொண்டது. ஒன்று தகுதித்தேர்வு. மற்றொன்றில் ஏழு தாள்களை எழுதவேண்டும்.

தகுதித்தேர்வில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே ஏழு தாள்களையும் திருத்துவார்கள். தேர்வுக்கு தயாராக விரும்புவோர் மொழிப் பாடத்தில் புலமை பெற்றிருப்பது அவசியம். 21 வயதில் தேர்வை எழுத ஆரம்பிப்பவர்கள் பலரும் தேர்ச்சி அடையவில்லை என்றால் சோர் வடைந்து விடுகின்றனர். 68% பேர் இரண்டு, மூன்றாவது தேர்விலே தேர்ச்சி பெறுகிறார்கள். முதல் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் 10%க்கும் குறைவே. எனவே, பொறுமை, விடா முயற்சி, கடின  உழைப்பு இருந்தால் கலெக்டர் கனவு கைகூடும்!
Read More »

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் முறைகள்


சிவில் சர்வீஸ் தேர்வு
சிவில் சர்வீஸஸ் தேர்வு என்பது ஏறத்தாழ 25 பணிகளுக்கு நடத்தப்படுகிற போட்டித் தேர்வு.  இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி, அயல் நாட்டுப் பணி, வருமான வரி பணி, கஸ்டம்ஸ் பணி, ஆடிட் பணி, போன்ற பல பணிகள் அதில் அடங்கும்.

தேர்வு முறை

பிரிலிமினிரி தேர்வு, மெயின் தேர்வு,  பர்சனாலிடி தேர்வு என மூன்று கட்டங்களில் நடத்தப்படும். இத்தேர்வை ஆண்டுதோறும்  10 லட்சத்திற்கும்  மேற்பட்ட பட்டதாரிகள் எழுதுகிறார்கள்.   இந்தத் தேர்வு எழுத குறைந்தபட்ச படிப்பு  பட்டப் படிப்பு.  அதை தொலைத்தொடர்பின் மூலம் பெறுவதில் ஆட்சேபணை இல்லை.  பட்டயப் படிப்பை முடித்தவர்கள், இதை எழுத முடியாது.

வயது
குறைந்தபட்ச வயது  21.

பொதுப் பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பு 30.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு 35.

பொதுப்பிரிவினர் நான்கு முறையும்,  பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 7 முறையும், தாழ்த்தப்பட்டவர் வயது வரம்பு முடியும் வரையும் எழுதலாம்.

தேர்வு எழுதும் முறை
இந்தத் தேர்வை எழுதுவதற்கு பொது அறிவிலும்,  நுண்ணறிவிலும் அதிகத் தேர்ச்சி பெற்று இருப்பது அவசியம்.  தற்சமயம் பிரிலிமினரி தேர்வில் ஒருவருடைய ஆராயும் திறனை அறிய சிவில் சர்வீஸ் ‘ஆப்டிடியூட் டெஸ்ட்‘  நடத்தப்படுகிறது.  அதற்கு மொத்த மதிப்பெண்கள் 200.  இரண்டாவது தாள் பொது அறிவு.  அதற்கும் 200 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.  இவை மல்டிபிள் சாய்ஸ் வினாக்கள்.  இதில் சுமார் 10,000 பேர் மெயின் தேர்வு எழுத தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.  அதில் வகுப்புவாரி பிரதிநிதித்துவமும் அடங்கும்.

மெயின் தேர்வைப் பொருத்தவரை, பொது அறிவுத் தாள்கள் நான்கு  இருக்கின்றன.  அவற்றிற்கு 250 வீதம் 1000 மதிப்பெண்கள் உண்டு.  அடுத்ததாக கட்டுரைத்தாள் ஒன்று உண்டு.  அதற்கு 250 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.  ஆறாவதாக ஒரே ஒரு விருப்பப் பாடத்தில் இரண்டு தாள்கள் தலா 250 மதிப்பெண்கள் வீதம் 500 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகின்றன.  இவை அன்றி தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் ஒரு தாள் தகுதி பெறுவதற்காக நடத்தப்படுகிறது.  தமிழைப் படிக்காதவர்கள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு மொழியில் தேர்வை எழுதலாம்.  இந்தத் தாள்களில் பெறும் மதிப்பெண்கள் ரேங்கை நிர்ணயிக்க எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.

முதன்மைத் தேர்வில் முதல் 2 ஆயிரம் இடங்களை பெறுபவர்கள் ஆளுமைத் தேர்விற்கு அழைக்கப்படுகிறார்கள்.  ஆளுமைத் தேர்விற்கு மொத்தம் 250 மதிப்பெண்கள்.

ஆளுமைத் தேர்விலும்,  பிராதனத் தேர்விலும் பெறும் மதிப்பெண்களைக் கூட்டி இறங்கு வரிசையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.  முதல் 600 இடங்களைப் பெறுபவர்கள் ஏதேனும் ஒரு பணியை கண்டிப்பாக பெற்றுவிடலாம்.

சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராக வேண்டும் என எண்ணுபவர்கள் பள்ளிக் காலம் தொட்டே செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும்.   பொது அறிவுப் புத்தகங்களைப் படிக்க வேண்டும். தகவல் தொடர்பு நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.  பொருளாதாரம், கணிதம், அறிவியல், அரசியல், நாட்டு நடப்பு,  அரசியல் அமைப்புச் சட்டம், புவியியல் போன்றவற்றில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.  கல்லூரியில் இந்தத் தேர்வு எழுதுவதற்குத் தோதாக இளங்கலைப் படிப்பையோ, இளம் அறிவியல் படிப்பையோ தேர்ந்தெடுக்க வேண்டும்.  பாடப் புத்தகங்களோடு நிறுத்திவிடாமல், நிறைய மேற்கோள் புத்தகங்களை வாசிக்க வேண்டும்.  முடிந்தால்  நிறைகலைப் படிப்பை தில்லி போன்ற இடங்களில் தொடரலாம்.  தேர்விற்குத் தயாவது என்று முடிவு செய்த பிறகு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 12 மணி நேரமாவது படிக்க வேண்டும்.  விடா முயற்சியும் , அர்ப்பணிப்பும், அகலாத கவனமும், மாறாத ஆர்வமும் சேர்ந்தால் வெகு எளிதில் இதில் வெற்றி பெற்றுவிடலாம்.
Read More »

ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) - அறிந்ததும் அறியாததும்


TET தேர்வு என்பது அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி உரிமைச்சட்டம் 2009 ன் படி அறிமுகப்படுத்தப்பட்டது. மத்தியிலும் (CTET) வேறு சில மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகே தமிழகத்தில் TET தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. தகுதியும் திறமையும் வாய்ந்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
வினாக்கள் கடினமாக இருக்கிறது என்று புலம்புவதை விட அந்த தரத்தில் உங்களுடைய தயாரிப்பு முறைகள் மற்றும் பயிற்சி முறைகள் இருக்கவேண்டும். கேள்வி பதில்களை  மனப்பாடம் செய்து மட்டும் வெற்றி பெற முடியாது. பாடங்களை புரிந்து கொள்ளவேண்டும். அப்போதுதான் பல கடினமான கேள்விகளை புரிந்து கொண்டு விடையளிக்க முடியும்.
மேலும் SET, NET தேர்வு போல  இத்தேர்வும் ஒரு தகுதித்தேர்வு தான்.  இதில் வெற்றிபெற்றால் நிச்சயம் பணி கிடைக்கும் என்று நினைக்கக்கூடாது. அதன்பிறகு தங்களுடைய 10, 12ம் வகுப்பு, பட்டபடிப்பு, D.T.Ed., (or) B.Ed.,  ஆகியவற்றில் உங்களது மதிப்பெண் மற்றும் TET தேர்வில் நீங்கள் பெறும் மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் கிடைக்கும் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையிலேயே பணிக்கு தேர்வு செய்யப்படுவீர்கள்.
இனிவரும் தேர்வுகளில் தேவையை விட வெற்றி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.  அந்நிலையில் அதிக கட்ஆப் மதிப்பெண் வைத்திருப்போர்களுக்கு மட்டும் பணி கிடைக்கும். எந்த பாடத்திற்கு எவ்வளவு ஆசிரியர்கள் தேவையென அறிவிக்கப்படுகிறதோ, அவ்வளவு ஆசிரியர்கள் மட்டுமே பணியமர்த்தப்படுவர்.
குறிப்பாக கம்யூட்டர் சயின்ஸ் போன்ற பாடங்களில், வெற்றிபெற்றாலும் அப்பாடத்தில் காலிபணியிடங்கள் அறிவிக்கப்படும் போதுதான் பணி கிடைக்கும்.
தேர்வில் வெற்றிபெற்றால் உடனே வேலை உறுதி என்று எண்ணி, பிறகு மனம் உடையக்கூடாது என்பதற்காகவே இந்த தகவல். தேர்வில் வெற்றிபெற்றும் கட்ஆப் மதிப்பெண் குறைவாக பெற்றதால் வேலை கிடைக்காதவர்கள் அடுத்தமுறை மீண்டும் தேர்வெழுதி தங்களுடைய மதிப்பெண்களை அதிகரித்துக்கொள்ளலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வெழுதி மதிப்பெண்களை அதிகரித்துக்கொள்ளலாம். முடிந்தவரையில் TET தேர்வில் அதிக மதிப்பெண்கள் (அதாவது 135) பெற்றுவிட்டால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.(அதாவது கட்ஆப் மதிப்பெண்களை அதிகரித்துக்கொள்ளலாம்).
இத்தேர்வில் வெற்றிபெற்றால் அரசுப்பள்ளிக்கு மட்டுமின்றி அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் அரசு ஊதியத்துடன் பணி கிடைக்கும். தனியார் பள்ளிகளிலும் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தற்போது TET தேர்வில் வெற்றிபெற்றோருக்கான தேவை அதிகமாகவே உள்ளது என்பதை மனதில் கொண்டு தேர்வுக்கு மனஉறுதியுடன் தயார்செய்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.
இத்தேர்வைப்பற்றிய முறையான பார்வை, சரியான வியூகம்,கடின உழைப்பு ஆகியவை இருந்தால் இத்தேர்வில் வெற்றிபெறுவது என்பது ஒன்றும் சவாலான செயல் அல்ல.
Read More »

இந்திய குடிமையியல் பணித் தேர்வுக்கான முக்கிய துறைகள்


தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த தற்கால நிகழ்வுகள்
குடிமையியல் தேர்வு முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும் போதிலும் இந்தப்பகுதி அதன் முக்கியத்துவத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. எனினும் இந்தப் பிரிவில் கேட்கப்படும் கேள்விகளின் துல்லியமானத் தன்மையை தெரிந்து கொள்ள தேர்வு எழுதுவோர் முயல வேண்டும். தேர்வு எழுதும் அனைவரும் தேசிய சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை அறிந்து வைத்திருக்க வேண்டும், ஆனால் அதைவிட கூடுதலாக சிலவற்றை செய்ய வேண்டும். சிறிதளவு தேடலும் கடும் உழைப்பும் அவசியம் ஆகும். நாட்டு நடப்புகளையும் அதனால் பிறதுறைகளில் எத்தகைய தாக்கங்கள் ஏற்படும் என்பதையும் உணர்ந்து படிக்க வேண்டும்.

உதாரணமாக போட்டித் தேர்வு எழுதும் ஒருவர், ஒரு விஷயத்தை சாதாரண மக்கள் பார்ப்பதைவிட மிகவும் ஆழமாக பார்க்க வேண்டும். அவ்வாறு செய்தால் நீங்கள் வெற்றி பெற்று விடலாம்.

தேர்வில் நீங்கள் வெற்றிபெறும் வாய்ப்புகளை ஆக்கவும், அழிக்கவும், இந்தப் பிரிவால் முடியும். எனவே, தர்க்க ரீதியாகவும் ஆழமாகவும், விஷயம் சார்ந்தும் படிக்க வேண்டும் அதுமட்டுமின்றி தேவையான ஒரு விஷயத்திலிருந்து சம்பந்தமில்லாத விஷயங்களை பிரித்து அகற்றுவதற்கான திறமை உங்களுக்கு இருக்க வேண்டும்.

இந்தியா மற்றும் இந்திய தேசிய இயக்க வரலாறு
இந்தப்பிரிவுக்கு வழங்கப்படும் மதிப்பெண்களின் அளவு அண்மையில் மாறியுள்ளது. வரலாற்றின் பிற பிரிவுகளைவிட நவீன இந்தியாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக NCERT வெளியிட்ட 12ம் வகுப்பு வரலாற்று புத்தகத்தை படியுங்கள்.

இந்தியா மற்றும் உலக புவியியல் NCERT வெளியிட்ட புவியியல் புத்தகங்களை படியுங்கள். சர்வதேச அளவிலும் நடைபெற்ற நாட்டு நடப்புகளை புவியியல் கோணத்திலும் புவி அரசியல் கோணத்திலும் படிக்க வேண்டும். தேர்வு எழுதுவதற்காக குறைந்தது மூன்று உலக வரைபடங்களை (Atlas) வைத்திருக்க வேண்டும். இவைதவிர இந்திய வரைப்படத்தையும் உலக வரைபடத்தையும் எப்போதும் சுவற்றில் தொங்க விட்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் எந்த ஓர் இடத்தையும் புரிந்து கொள்வதும், கண்டு பிடிப்பதும் ஒருவருக்கு எளிதானதாக இருக்கும் அதுமட்டுமின்றி இது நினைவாற்றலையும் அதிகரிக்கும்.

இந்திய ஆட்சி மற்றும் நிர்வாகம்
இந்தப் பிரிவில்தான் நாட்டு நடப்புகள் மிக அதிக அளவில் இடம் பெற்றிருக்கும். நாட்டு நடப்புகளுடன் சம்பந்தப்பட்ட இந்திய அரசியல் சாசனம் பற்றி கேள்விகள் கூட கேட்கப் படலாம். எந்த ஒருநாட்டு நடப்பு சம்பந்தப்பட் விஷயத்தையும் மிகவும் ஆழமாக படிக்கவேண்டும். அவ்வாறு செய்தால் இந்தப் பிரிவை வெற்றிகரமாக முடித்துவிடலாம். தி ஹிந்து நாளிதழில் வெளியாகும் தலையங்கங்களையும், அவற்றுடன் சம்பந்தப்பட்ட முன்னணி கட்டுரைகளையும் படிக்க வேண்டும்.

பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாடு
இந்தப் பிரிவும் நாட்டு நடப்புடன் சம்பந்தப்பட்ட ஒன்றுதான். இந்தப் பிரிவில் கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் விடையளிப்பதற்கு தி எகனாமிக் டைம்ஸ் இதழின் தலையங்கங்களை படிப்பதே போதுமானது. குடிமையியல் பணிக்கான முதன்மைத் தேர்வுக்கான மிக முக்கியமான குறிப்பு ஆதாரம் (நாட்டு நடப்புகள் மற்றும் இந்தியப் பொருளாதாரம்) தி எகனாமிக் டைம்ஸ் தலையங்கங்கள் தான். எனவே, தி எகனாமிக் டைம்ஸ் இதழின் தலையங்கத்தை படிப்பதற்காக நாள் தோறும் அரைமணி நேரம் செலவிட்டால், அது முதன்மைத் தேர்வுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அண்மையில் வெளியிடப்பட்ட பட்ஜெட் ஆவணங்கள், பொருளாதார ஆய்வறிக்கை நிதி ஆணைய அறிக்கைகள் ஆகியவற்றின் முக்கிய அம்சங்களும் விரல் நுனியில் இருக்க வேண்டும். 6 சூழலியல் குடிமையியல் பணித்தேர்வுக்கான பாடத்திட்டத்தில் அண்மையில் சேர்க்கப்பட்டுள்ள பிரிவு இதுவாகும்.

பொது அறிவியல்
கட்டுரைகளை படிப்பது இந்தப் பிரிவை எதிர் கொள்வதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் வெளியாகும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சிறப்பு மலரில் வெளியாகும் முக்கியமானக் கட்டுரைகளை படிப்பது எப்போதும் நல்லது.

முக்கிய அறிவுரைகள்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தலைப்புகளுக்கும் தயாராகும் போது அத்துறைகளில் ஏற்பட்டுள்ள அண்மைக்கால மாற்றங்களைத் தெரிந்துக் கொண்டிருப்பது நல்லது. தேர்வு எழுதும் சூழல் எவ்வாறு இருக்கும், அதை எதிர்கொள்வது எப்படி என்பதை தெரிந்து கொள்வதற்கு எளிய வழிகளும் உள்ளன. முதலில், ஒவ்வொருவரும் அகில இந்திய வானொலியில் இரவு 9 மணிக்கு ஒலிபரப்பாகும் ஆங்கிலச் செய்திகளையும் (News at Nine) - நிகழ்ச்சியையும் கேட்க வேண்டும்.

அடுத்த நாள் காலையில் ஒவ்வொருவரும் தி ஹிந்து நாளிதழை படிக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது நாம் கேட்ட பின்னர் படித்த விஷயம் மனதில் நன்றாக பதியும். அதன்பிறகு இது தொடர்பாக குடிமையியல் பணி போட்டித் தேர்வுக்காக வெளிவரும் ஏதேனும் ஒரு முன்னணி பொது அறிவு இதழில் வெளியான கட்டுரையையும் படிக்க வேண்டும்.

முதன்மைத் தேர்வு
முதன்மைத் தேர்வானது நிர்வாகத் திறன், முடிவெடுக்கும் வல்லமை, பிரச்சனைகளை தீர்க்கும் திறன், மனிதர்களுக்கிடையே தகவல் பரிமாற்றத் திறன்கள் ஆகியவற்றை இப்பிரிவு சோதித்துப்பார்க்கிறது. இந்தத் தாள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதன் மூலம் முதன்மைத் தேர்வு என்பது ஒரே பந்தைக் கொண்டு ஒரே வேகத்தில் எல்லா வீரர்களையும் சோதிக்கும் போட்டியைப் போன்றதாக மாறியுள்ளது. CAT தேர்வில் சோதிக்கப்படுவதைப் போன்று இத்தேர்வில் மேலாளருக்குரிய திறமை சோதிக்கப்படாது, நிர்வாகத்திறமையுடன் சோதிக்கப்படும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

இரண்டுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். முதலில் தினத்தோறும் பயிற்சி பெறுவதற்கு ஒரு நல்ல வழிகாட்டி புத்தகத்தை வாங்குங்கள். இரண்டாம் தாளை எதிர்கொள்வதற்கு அதிக பயிற்சி தேவை. பயிற்சி தான் எதையும் சிறப்பானதாக்குகிறது.

புரிந்து கொள்ளும் திறன்
தினமும் இரு செய்தித்தாள்களின் தலையங்கங்களை, குறிப்பாக தி ஹிந்து மற்றும் தி எகனாமிக் டைம்ஸ் இதழ்களில் வெளியாகும் தலையங்கங்களை படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அவற்றைப் படித்து நீங்கள் புரிந்து கொண்ட விஷயங்களை சுருக்கமாக எழுதிப்பாருங்கள்.

தி ஹிந்து நாளிதழில் வெளியாகும் தலையங்கங்கள் எப்போதும் முக்கியமான நாட்டு நடப்பு விஷயங்களையே அடிப்படையாகக் கொண்டிருக்கும். படித்தவற்றை புரிந்து கொண்டு திருப்பி எழுதிபார்க்கும் வழக்கம் முதன்மை தாள்களை நீங்கள் சிறப்பாக எதிர்கொள்வதற்கு உதவும்.

தகவல் பரிமாற்றுத் திறன் உள்ளிட்ட மனிதத் திறன்கள்
இந்தப் பிரிவுக்கென குறிப்பிட்ட வரையறை எதுவும் இல்லை. இந்தப் பிரிவில் எத்தகைய வினாவை வேண்டுமானாலும் கேட்கும் உரிமை வினாத்தாள் தயாரிப்பவருக்கு உண்டு. CAT தேர்விலிருந்து CSAT தேர்வை வேறுபடுத்திக் காட்டுவது இந்தப் பிரிவுதான். இந்தப் பிரிவை சிறப்பாக கையாள வேண்டுமென நினைத்தால் ஏதேனும் ஒரு சர்ச்சையான விஷயத்தை எடுத்துக் கொண்டு அதை வித்தியாசமான முறையில் எப்படி தீர்க்கலாம் என்பது பற்றி ஆராயலாம். மாணவர்கள் தங்களை நிர்வாகிகளாக நினைத்துக் கொண்டு சர்ச்சைக்குரிய சூழலை அரசியல் சட்டப்படியான வழியில் எப்படி சமாளிக்கலாம் என்பது பற்றி ஆராயலாம். இதில் முக்கியமான வார்த்தையை அரசியல் சட்டம் என்ன சொல்கிறதோ அதேபோல் சிந்திக்கும் திறனை ஏற்படுத்திக் கொள்வது கட்டாயம் ஆகும்.

Logical Reasoning - இந்தப் பிரிவை எதிர்கொள்வதற்கு R.S. அகர்வால் எழுதிய புத்தகம் போதுமானது. பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை நன்றாக புரிந்துகொண்ட பிறகு பிரச்சனைகளை தீர்பதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும். இதற்கான பயிற்சிகளை எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு மேற்கொள்ள வேண்டும். சூழ்நிலைக்கேற்றவாறு சிறப்பாக செயல்படும் தன்மையை வெளிப்படுத்துவதற்கு எப்போதும் முயல வேண்டும்.

SUDOKU புதிருக்கு விடை கான தினமும் ஐந்து நிமிடங்கள் ஒதுக்கவேண்டும். SUDOKU நம்மை அதற்கு அடிமையாக்கி விடும் என்பதால் அதற்கு ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஒதுக்காதீர்கள். புதிர்களை தீர்ப்பதன் மூலம் நமது அறிவுக்கு சற்று உணவளிப்பது புதிர்களுக்கு உடனடியாக விடையளிக்கும் திறனை அதிகரிக்கும் அதே போல் குறுக்கெழுத்துப் போட்டிகளையும் நிரப்ப முயல வேண்டும்.
இப்பிரிவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிப்பதற்காக வாய்ப்பாடு, சதவீத வாய்ப்பாடு போன்ற சூத்திரங்களை நினைவில் கொள்ள வேண்டும். இதற்காக பல்வேறு அட்டவணைகளையும் வரைபடங்களையும் செய்து பார்க்க வேண்டும். இவ்வாறு செய்வது தேர்வை எளிதாக அணுகுவதற்கு உதவியாக இருக்கும்.
ஆங்கில மொழியைப் புரிந்து கொள்ளும் திறன் இரண்டாம் தாளின் முதல் பிரிவுக்கு கூறப்பட்டவை அனைத்தும் இதற்கு மிகவும் பொருந்தும். ஆங்கில சொற்களை அதிக அளவில் தெரிந்து வைத்துக் வேண்டும்

பள்ளித் தேர்வுகளில் புரிந்து கொள்ளும் திறனை அறிவதற்கான கேள்விகள் நேரடியாகவும், 4 வாய்ப்புகளில் ஒன்றை தேர்ந்தேடுக்கும் வகையில் எளிமையாகவும் கேட்கப்படும். அவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து விடையளித்து விடலாம். ஆனால் இந்தத் தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட குறிப்புகள் தரப்பட்டு அவற்றில் எத்தனை சரி / தவறு என்பதை கண்டறியும்படி கோரப்படும். இந்த வகை வினாக்களில் ஏதேனும் மறைமுக அர்த்தம் உள்ளதா? என்பதை உறுதி செய்வதற்காக மிகவும் கவனமாகவும், திரும்பத் திரும்பவும் படிக்க வேண்டியிருக்கும். என்பதால் அதிக நேரத்தையும் சக்தியையும் செலவழிக்க வேண்டியிருக்கும். அவசரமாகவும், மேலோட்டமாகவும் படித்தால் அது தவறான விடையை தேர்வு செய்யும் நிலைக்கு நம்மைத் தள்ளிவிடும். எனவே வினாவில் தரப்பட்டுள்ள 4 குறிப்புகளையும் தொடர், தொடராக மீண்டும் மீண்டும் படித்து புரிந்து கொண்டு பதிலளிக்க வேண்டும்

முதல் நிலைத் தேர்வுக்கான வினாத் தாள்களின் முதல் பக்கத்தில் புரிந்து கொள்ளப்பட வேண்டிய பத்தி இருக்கும். ஆனால் அந்த பத்தியின் அடிப்படையில் எழுப்பப்படும் வினாக்கள் 3வது 8வது பக்கத்தில் தான் (முதல் பக்கத்தில் உள்ள பத்தி ஆங்கிலத்தில் இருக்கும். இரண்டாவது பத்தியில் அதன் ஹிந்திமொழிப்பெயர்ப்பு இடம் பெற்றிருக்கும்) இடம் பெற்றிருக்கும் இதற்காக பக்கங்களை அடிக்கடி திருப்ப வேண்டியிருக்கும். அதிலும் குறிப்பாக 4 குறிப்புகளைக் கொடுத்து விடை எழுதக் கூடிய வினாவாக இருந்தால், இன்னும் அதிக முறை பக்கங்களை திருப்ப வேண்டியிருக்கும். எனவே, இதற்கு பயிற்சி தேவை.

படகுகளின் வேகம், நகரும் ரயில்கள், வணிக கூட்டுமுயற்சி, திரவக் கலப்பு போன்றவை தொடர்பான வினாக்களுக்கு விடையளிக்க கடினமான சூத்திரங்களை பயன்படுத்தி மூளையைக் குழப்பிக் கொண்டிருக்கத் தேவையில்லை. அதிவேகமாக கணக்கிடுவதற்கு வேதக்கணித சூத்திரங்களையும், சீனத் தேற்றங்களையும் நிபுணத்துவத்துடன் கற்றுக்கொள்வது அவசியமாகும்.

குடிமையியல் பணிக்கான போட்டித் தேர்வுகளைப் பொறுத்தவரை, இதுவரைப் பார்த்த திறனறித் தேர்வுகளிலேயே இதுதான் மிகமிக எளிதானது. அடுத்த ஆண்டிற்கான வினாத்தாளும் இதே அளவுக்கு எளிதானதாக இருக்குமா? என்று எவரும் உறுதியாக கூறமுடியாது. ஏனெனில் தேர்வுகளை மிகவும் கடினமாக நடத்துவதில்தான் UPSC பெருமை கொள்கிறது.

Probationary Officer தேர்வு, CAT தேர்வு ஆகியவற்றுக்கு விரைவாக கணக்கிடும் திறன் கண்டிப்பாக தேவை. ஆனால் CSAT தேர்வுக்கு கணிதத்தில் புரிதலும், கணக்கிடுவதில் துல்லியத் தன்மையையும் போதுமானது. இதற்கு மனப்பாடம் செய்யவோ, 16 இலக்க எண்ணுக்கு கணம் (Cube root) காண்பதோ அவசியமில்லை.

குடிமையியல் பணிக்கான முதல்நிலைத் தேர்வுக்கு இனி விரைவாக படிக்கும் திறன் மிகவும் அவசியம் ஆகும். பொது அறிவுத் தேர்விலும் திறனறித் தேர்விலும் குறிப்புகளை படித்து விடையளிக்கும் 4 குறிப்பு கேள்விகள் இடம் பெறுகின்றன. இவை நமது நேரத்தை சாப்பிடக் கூடியவையாகும்.

தேர்வின் போக்கு மாறிவிட்டதால், கலை, வணிகம் போன்ற படிப்புகளைப் படித்தவர்களைவிட பொறியாளர்கள் MBA பட்டதாரிகள், அறிவியல் பட்டதாரிகள் ஆகியோருக்கு தான் அதிகவாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. 9 பொது அறிவுத்தாளில் கேட்கப்படும் அறிவியல் சமபந்தப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்க அறிவியல் பாடத்தை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும் என்று எந்த தேவையுமில்லை. NCERT புத்தகங்கள், பொது அறிவு புத்தகங்கள் ஆகியவற்றை முறையாக படித்து தேர்வுக்கு தயாராவோர் இந்த கேள்விகளில் பெரும்பாலானவற்றுக்கு விடையளிக்க முடியும்.

அதேபோல் ரகசிய திறனறிதல் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு தற்போது போதுமான நேரமும், யோசனைகளும் உள்ளன. எனவே MBA படிக்காதவராகவோ, CAT, வங்கி PO தேர்வு எழுதாதவராகவோ இருப்பது உங்களை எந்த வகையிலும் பாதிக்காது. ஏனெனில் உங்களின் திறனறித் திறமைகளை சரியான திசையில் வளர்த்துக் கொள்ள உங்களுக்கு அதிக நேரம் கிடைக்கும்.

இந்தத் தேர்வை புதிதாக எழுதுவோரும் ஏற்கனவே எழுதிக் கொண்டிருப்போரும் தங்களை வெவ்வேறு வகையில் கருதிக்கொள்வார்கள். அதாவது புதிதாக தேர்வு எழுத வருவோர் அனுபவம் இல்லாதவர்கள் என்றும் ஏற்கனவே தேர்வு எழுதிக்கொண்டிருப்பவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள் என்றும் கருதிக்கொள்வார்கள், ஆனால் குடிமைப்பணித் தேர்வுகளைப் பொறுத்தவரை அதிலும் குறிப்பாக தற்போதைய சூழலில் அனைவரும், ஆரம்பத்திலிருந்துதான் தங்களின் முயற்சியை தொடர வேண்டும். இப்போது எவரும் உயர்ந்தவர் அல்ல. கடுமையான உழைப்பும், பயிற்சியும் தான் வெற்றியின் பயன்களைப் பெற்றுத்தரும்.
Read More »

சிவில் சர்வீஸஸ் பிரதான தேர்வை எதிர்கொள்ளும் முறைகள்



பொதுவாக உயரத்துக்கு கொண்டு செல்வது படிகள் எனும்போது உயர் பதவிகளுக்கு உயர்த்திச் செல்வது திட்டமிட்ட படிப்புகள் என்றால் அது மிகையல்ல. ஐ.ஏ.எஸ் போன்ற உயர் பதவிகளுக்கான தேர்வுகளுக்கு திட்டமிட்ட படிப்புகளாக மட்டுமில்லாமல் திட்டம் போட்டு படித்த படிப்புகளாகவும் இருக்கவேண்டும். திட்டமிடுதலை காட்டிலும், திட்டம் போட்டுத்தான் தீர்க்கமான வெற்றியை பெறமுடியும் என்பது வரலாற்று காலங்களில் இருந்து இன்று வரை மறுக்க முடியாத ஒரு உண்மையாக இருந்து வருகிறது. பெரும் போர்கள், தேர்தல்கள், ஆட்சியமைப்புக்கு இப்படி எதுவாக இருந்தாலும் திட்டம் போட்டுத்தான் வெற்றி வாகை சூடி இருக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கானவர்களும் லட்சக்கணக்கானவர்களும் பங்கேற்கும் தேர்வுகளிலும் திட்டம் போட்டுதான், வெற்றிக்கு நமது விலாசத்தை காட்டவேண்டும்.

தேர்வு முறையில் ஏற்பட்ட மாற்றம்
சிவில் சர்வீஸ் தேர்வுகளின் பூர்வாங்க (Preiminary Exam) தேர்வு முறையில் 2011ம் ஆண்டு யுபிஎஸ்இ மாற்றம் கொண்டு வந்தது. 2 தாள்களைக் கொண்ட இத்தேர்வு தலா 200 மதிப்பெண்கள் கொண்டதாக அமைந்தது. பொது அறிவுப் பாடத்தில் கேட்கப்படும் கேள்விகள் சற்று வித்தியாசமாகவும் அமைந்தது. அதுபோல விருப்பப்பாடம் நீக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட 2வது தேர்வுத் தாள் முற்றிலும் மாற்றமுடையதாக அமைந்தது. மாணவர்கள் தாம் பயின்ற பாடங்கள் மூலம் பெறும் அறிவுக்கு தரப்படும் முக்கியத்துவத்தை காட்டிலும், அவர்களின் அறிவுத்திறனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என அரசு சார்பிலான கல்வி நிபுணர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்ததையடுத்து சிவில் சர்வீஸ் பூர்வாங்கத் தேர்வு முறையில் 2011ம் ஆண்டு மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதைத் தொடர்ந்து 2013ம் ஆண்டின் தேர்வு முறையில் ஒரு முழுமையான மாற்றத்தை பிரதான தேர்வில் (Main Exam) கொண்டு வந்துள்ளது. இதன்படி விருப்பப்பாடங்கள் இரண்டிலிருந்து ஒன்றாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தாளுக்கும் அதிகபட்ச மதிப்பெண்கள் 600லிருந்து குறைந்து 500ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான தேர்வுகளில் உள்ள தேர்வுத்தாள்களும் அதன் மதிப்பெண்களும்
தகுதி தேர்வுக்காக மட்டும் ஒரு மாணவன் இந்திய அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் உள்ள ஏதாவது ஒரு மொழியில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இரண்டாவதாக பள்ளி தேர்வின் தகுதியில் அடிப்படையில் உள்ள ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற வேண்டும். மேற்கண்ட இரண்டு தாள்களிலும் தலா 300 மதிப்பெண் மூலம் மொத்தமாக 600 மதிப்பெண் ஆகும். ஆனால் இந்த மதிப்பெண்கள் மொத்த தரவரிசை பட்டியலில் சேர்த்து கொள்ளப்பட மாட்டாது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2வது கட்டமாக நடைபெறும் பிரதான தேர்வில் கட்டுரை மதிப்பெண்கள் 200லிருந்து 250ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுஅறிவு தாள்கள் 2லிருந்து 4ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்குரிய மதிப்பெண்கள் தாள் ஒன்றுக்கு 300 லிருந்து 250ஆக குறைக்கப்பட்டு மொத்தமாக 1000 மதிப்பெண்கள் பொதுஅறிவு தேர்விலிருந்தே கேட்கப்படவுள்ளது. பழைய முறையில் இருந்த 4 தாள்களை கொண்ட 2 விருப்பப்பாடங்கள் குறைக்கப்பட்டு ஒரு விருப்பப்பாடமாகவும், தாள் ஒன்றுக்கு 300 என்ற மதிப்பெண்கள் 250 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 1200 மதிப்பெண்கள் கொண்ட விருப்பப்பாடம் தற்போது 500 மதிப்பெண்களாக குறைக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட முதன்மை தேர்வின் எழுத்து தேர்வு 7 தாள்களிலும் கிடைக்கும் மொத்தம் 1750 மதிப்பெண்கள் முன்னிலையில் வரும் மாணவர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். 3ம் மற்றும் இறுதிக்கட்டமாக தில்லியில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் 275 மதிப்பெண்கள் வழங்கப்படும். இறுதி தரவரிசை பட்டியலில் எழுத்து தேர்வின் 1750 மதிப்பெண்களும், நேர்முகத்தேர்வின் 275 மதிப்பெண்களும் சேர்த்துக்கொள்ளப்படும். மொத்தமாக 2025 மதிப்பெண்களுக்கு இறுதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். முதன்மை தேர்வில் நடைபெறும் 7 தேர்வுத் தாள்களின் மொத்த மதிப்பெண்கள் 1750 ஆகும்.

தகுதித்தேர்வு தாள்கள்
தகுதித்தேர்வில் இரண்டு மொழிப் பாடங்களில் தேர்வு எழுத வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 8வது அட்டவணையில் உள்ள ஏதேனும் ஒரு மொழியிலும் ஆங்கிலத்திலும் தேர்வுகள் நடைபெறும். பத்தாம் வகுப்பு பாடநிலையில் கேள்விகள் கேட்கப்படும். தாய் மொழி மற்றும் ஆங்கிலத்தில் விண்ணப்பதாரரின் அடிப்படை மொழி அறிவை சோதித்துப் பார்க்கவே இந்த இரு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த 2 தாள்களிலும் 300 மதிப்பெண்கள் வரிசை எண் வழங்கப்படும். ஆனால் இந்த மதிப்பெண்கள் தரவரிசைக்கு பரிசீலிக்கப்படமாட்டாது. இந்த 2 தாள்களிலும் தேர்ச்சி பெறாவிட்டால் இதர தாள்கள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது. அதற்காக இத்தாள்கள் விஷயத்தில் அலட்சியமாக இருந்து விடக்கூடாது. ஏனெனில் புதிய தேர்வு முறையில் இவ்வளவு மாற்றம் கொண்டு வந்த மத்திய தேர்வாணையம் இதிலும் ஏதேனும் பொடி வைத்தாலும் வைக்கலாம் எனவே இரண்டு தாள்களையும் கவனத்துடன் எழுத வேண்டும் என்பது அவசியமாகிறது. மேலும் நிறைய இளைஞர்கள் கேட்கும் கேள்வி என்னவென்றால் இந்த தாள்களில் தகுதிக்கு எத்தனை மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பதுதான். உண்மையை சொல்லப்போனால் அந்த தகுதி எவ்வளவு என்பதையும் மத்திய தேர்வாணையமே முடிவு செய்கிறது.

கட்டுரை
சிவில் சர்வீஸ் தேர்வுகளில் கட்டுரை 1993ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. கணிதம் மற்றும் பொறியியல் படிப்பை சேர்ந்த மாணவர்கள் இத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை அள்ளுவதும். பொறியியல் அல்லாத மாணவர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெறுவதும் பல ஆண்டுகள் இருந்து வந்தது. எல்லா மாணவர்களுக்கும் அதாவது பொறியியல், சமூகவியல், பொருளாதாரம், அறிவியல் என்ற அனைத்து தரப்பு மாணவர்களையும் ஒரே தட்டில் கொண்டுவர வேண்டும் என்பதற்காக புகுத்தப்பட்டதே கட்டுரையாகும். கடந்த ஆண்டு வரை 200 மதிப்பெண்கள் கொண்ட இந்த தேர்வுத்தாளுக்கு புதிய திட்டத்தின்படி 250 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தேர்வாளர்கள் கட்டுரைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியும்.

ஒரு கட்டுரை என்னென்ன அம்சங்கள் எல்லாம் கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு சில வரையறைகள் உள்ளன. இதன்மூலம் ஒரு மாணவனின் எண்ணங்கள், அவற்றின் வெளிப்பாடு தெரிவிக்க விரும்பும் கருத்துக்களை கோர்வையாக்கும் திறன், வாதங்களுக்கு வலிமை சேர்க்கும் பாங்கு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டுரைகள் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன. இந்தியாவை இந்த நூற்றாண்டில் முன்னெடுத்து செல்ல விரும்பும் இளைய அதிகாரிகளின் மன எழுச்சியையும் மனோபாவத்தையும் இந்த கட்டுரைகள் மூலம் தெரிந்து கொள்ள முடியும். எனவே, கட்டுரைகள் கட்டுக்கோப்பாகவும். ஒரு கறார் களஞ்சியமாகவும் அமைய வேண்டும் என தேர்வாணையம் எதிர்பார்க்கும் என்பதை போட்டித் தேர்வர்கள் மறக்கக்கூடாது.

பொது அறிவு தேர்வுகள்
இரண்டு தாள்களை மட்டுமே கொண்டிருந்த பொது அறிவு தாள்கள் 4 ஆக அதிகரிக்கப்பட்டு மதிப்பெண்களும் 600 லிருந்து 1000மாக மாற்றப்பட்டுள்ளது. இதிலிருந்து தேர்வாணையம் பொது அறிவிற்கு எத்தனை முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்பது தெள்ளத்தெளிவாகும். பொது அறிவு தாள்களை எதிர்கொள்வதற்காக தங்களை சிறப்பான முறையில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் சொல்லத் தேவையில்லை. இது மட்டுமல்லாது பழைய பாணியில் கேட்கப்பட்ட பாடத்திட்டம் அப்படியே இருந்தாலும் அதற்கு மேலாக புதியதாக சில சமகால பிரச்சினைகளையும் சவால்களையும் இத்தேர்வில் உள்ளடக்கி கொள்வது என்பது முக்கியமான அம்சமாகும். மொத்தத்தில் பொதுஅறிவு தாளில் தரம் மிக அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.

பொது அறிவு தாள் 1
இத்தாள் இந்திய வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், உலக புவியியல் மற்றும் சமுதாயம் பற்றிய அனைத்து தலைப்புகளையும் உள்ளடக்கியதாகும். வரலாற்று தலைப்பில் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு, வரலாறு ஆகியவை புத்தம்புதிதாகும். சுதந்திர இந்தியா வரலாறும் முக்கியத்துவம் பெறுகிறது. உலக புவியியலும், புவியியல் தலைப்புகளும் புதிதாக இடம்பெற்றுள்ளன. இதில் சமுதாயம் மற்றும் சமுதாய பிரச்சினைகள் என்பது சமகால தலைப்புகளாகும்.

இத்தாளில் குறிப்பிடப்பட்டுள்ள சில தலைப்புகள் ஏற்கனவே இருந்தாலும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பாகங்களில் கவனம் செலுத்துவது அவசியமாகும். மேற்கண்ட அனைத்து தலைப்புகள் பற்றி புத்தகங்களில் படித்தாலும் அது விஷயமாக சமகாலத்தில் என்ன நடக்கிறது என்பதை பற்றியும் போட்டி தேர்வர்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதை தேர்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பொது அறிவு தாள் 2
இத்தாளில் அரசு, அரசியலமைப்பு, அரசியல். சமூக நீதி மற்றும் சர்வதேச உறவுகள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு வரை இந்திய அரசியல் இந்த பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக இருந்து வந்தாலும், சமகால நிகழ்வுகள் பற்றியே அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டது என்பது நிதர்சனம். மேலும் இந்த புதிய தேர்வு முறையில் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ள சமூகநீதி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றி தெரிந்துகொள்ள ஒவ்வொருவரும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று தரமான செய்தித்தாள்களை அன்றாடம் படித்து வந்தால் மட்டுமே முழுமையாக பதில் எழுத முடியும்.

மேலும் அரசு இயங்கும் விதம், நிறுவனங்கள் பற்றிய தலைப்புகள் போன்றவை பாடத்திட்டத்தில் இருந்தாலும், அதைபற்றிய மேலோட்டமான கருத்துக்களையும் நிகழ்வுகளையும் மட்டுமே தெரிந்துகொண்டால் மதிப்பெண் பெறுவது கடினமாகும். இங்கு தேர்வாளர் எதிர்பார்ப்பது மாணவனின் போட்டியாளரின் திறமை மற்றும் அவரது புரிந்துகொள்ளும் தன்மை என்றால் அது மிகையல்ல.

பொது அறிவு தாள் 3
இத்தாள் தொழில்நுட்பம், பொருளாதார வளர்ச்சி, பல்லுயிர் பெருக்கம், சுற்றுப்புறச்சூழல், பாதுகாப்பு மற்றும் பேரழிவு மேலாண்மை போன்றவற்றை கொண்டதாகும். பொருளாதாரம் மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், தினமும் ஒரு மாற்றம் என்ற வகையில், பொருளாதார மாற்றமும் வளர்ச்சியும் உள்ள நம்நாட்டில் எத்தகைய அறிவு நுட்பம் வேண்டும் என்பது மிகவும் முக்கியம். எனவே, கடந்த கால பொருளாதார நிலைமை, நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் எப்படி அமையும் என்பதை பற்றிய செய்திகளை அவ்வப்போது போட்டித் தேர்வுக்கு என்று வெளியிடப்படும் மாதாந்திர சஞ்சிகைகளை படிப்பதன் மூலமாகவோ பொருளாதார வல்லுநர்களின் கருத்துக்களை கொண்ட தினசரிகள் மூலமாகவோ அறிவுநுட்பத்தை வளர்த்துக்கொள்ளலாம். விவசாயம், உணவு சம்பந்தப்பட்ட தகவல்கள் மிக முக்கியமானதாகும். எனவே, இதில் ஏற்படும் மாற்றங்கள், ஏற்றத்தாழ்வுகள் அனைத்தையும் விரல்நுனியில் வைத்திருக்கவேண்டும் என்பது அவசியமாகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியோடு நாட்டின் பாதுகாப்பு பற்றியும் அறியவேண்டியது முக்கியமாகும். இதில் குறிப்பாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு பற்றி அறிந்து கொள்ளவேண்டியது தேவையாகும். அறிவியலின் ஆக்கமுறைகள் ஜெட் வேகத்தில் செல்வதால் அதில் ஏற்படும் நன்மை, தீமைகளின் தாக்கம் எவ்வளவு இருக்கும் என்று யாராலும் கணிக்கமுடியாத ஒரு சூழ் நிலையில், நாட்டையே நிர்வாகம் செய்யப்போகும் இளைய தலைமுறையினர் அதை பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தேர்வாளர்கள் சுற்றுச்சூழல் பகுதியையும் புகுத்தியுள்ளனர். சுற்றுச்சூழல் ஒரு சிறு பகுதியாக கடந்த தேர்வுகளில் இருந்தாலும். 2011 பூர்வாங்கத்தேர்வில் மாற்றம் கொண்டு வந்ததிலிருந்து இன்றைய 2013 புதுப்பாடத்திட்டம் வரை பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. இதில் முக்கியமாக பல்லுயிர் பெருக்கம், பேரழிவு மேலாண்மை முக்கியமான இடத்தை வகிக்கிறது. மாணவர்கள் இந்த தலைப்புகளில் முக்கியமாக ஏற்பட்டுள்ள மாற்றங்கள், வளர்ச்சிகள், சர்வதேச பிரச்சினைகள் மற்றும் இந்தியாவின் நிலைப்பாடு ஆகியவை பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

பொது அறிவு தாள் 4
இத்தாள், நெறிமுறைகள், ஒருமைப்பாடு மற்றும் மனோபாவம் சம்பந்தப்பட்ட பகுதிகளை உள்ளடக்கியது. சிவில் சர்வீஸ் தேர்வுகளில் முதன்முறையாக இந்த பகுதி சேர்க்கப்பட்டிருப்பது மிக முக்கியமாகும். காரணம், வளர்ந்து வரும் சமுதாயம், ஊழல், ஒற்றுமையின்மை, மாறுபட்ட மனப்பான்மை போன்ற பல பிரச்சினைகளால் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. அதிகமான இளைஞர்களைக் கொண்ட நாடு என்ற பெருமை கொண்ட இந்தியா, அந்த இளைஞர்கள் வருங்காலத்தை சந்திப்பதற்கு ஏற்றபடி அவர்களை எப்படி வடிவமைப்பது என்பதற்காக இப்பகுதி சேர்க்கப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் அல்லாது அரசின் பார்வையில் பொது வாழ்வு நெறிமுறைகள் பற்றி பலமுறை பேச்சுக்கள் நடந்தாலும் அதனை வழிமுறைப்படுத்த இம்மாதிரி தேர்வுகள்தான் சரி என்று நினைத்து தேர்வாளர்கள் இந்த பகுதியை சேர்த்துள்ளனர்.

புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் உளவியல் மனப்பான்மை மற்றும் மதிப்புமுறை தேர்வுகள் நாட்டை ஆள்வதற்குரிய சிறந்த இளைஞர்களை உருவாக்குவது மட்டுமல்லாது அதே இளைஞர்கள் ஒருமைப்பாட்டிலும் நெறிமுறைகளிலும் சிறந்தவர்களாக இருக்கவேண்டும் என்றும் வழிவகை செய்கிறது. அதுதவிர. தகுதியானவர்கள் தகுதியான பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பது தெள்ளத்தெளிவாகிறது.

இதுதவிர, மாணவர்கள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மற்றும் திறந்தவெளி சந்தைமயமாக்கல் என்ற சூழலிலும் மற்றும் தாராளமயமாக்கல் கொள்கையில் நிர்வாகம் செய்ய வரும்போது அவர்கள் ஒரு வழிகாட்டியாக இருக்கவேண்டுமே தவிர, ஒழுங்கு முறைபடுத்துபவராக இருக்கக்கூடாது என்பதும் தேர்வாளர்களின் கருத்தாகும்.

உலகமயமாக்கல்
மாறுபட்ட மற்றும் பலதரப்பட்ட மக்களையும் சமுதாயத்தையும் கொண்டுள்ள நமது நாட்டில் இளைஞர்கள் முன்நின்று நிர்வாகம் செய்ய வேண்டும் என்றும் தேர்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். தேர்வுக்கு தயார்செய்யும் இளைஞர்களை நேரடி கேள்விகளை மட்டுமல்லாது இடம், பொருள் அறிந்து சூழ்நிலைக்கேற்றவாறு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவையும் நிச்சயம் சோதிக்கவிருக்கிறார்கள். எனவே, இந்த தாளில் மட்டும் ஒருவர் தன்னுடைய ஏட்டுக்கல்வி அல்லாது திறன் அறிதல், ஒரு விஷயத்தை அணுகுமுறை செய்வது, பொதுவாழ்வில் தூய்மை, சமூகம் சந்திக்கும் சிக்கலான பிரச்சினைகளுக்கு எளிய தீர்வுகாணுதல் போன்ற பலவிதமான கோணங்களில் தங்களை தயார் செய்துகொள்வது அவசியம். எனவே, இந்த தேர்வு மூலம் தனிமனிதனின் திறமை மட்டுமல்லாது, அவருடைய அணுகுமுறை, தலைமையேற்கும் பண்பு, பிரச்சினைகளை அறிந்து முடிவெடுக்கும் திறமை, பிரச்சினைகளை கையாளும் தன்மை, ஈடுபாடு, உணர்ச்சிவயப் படாமை, தகவல்தொடர்பு திறன், நன்னெறிகள், நிர்வாக ரீதியிலான நிலைப்பாடு குறிப்பிட்ட காலத்தில் முடிவெடுக்கும் தன்மை உள்ளிட்ட பல பரிமாணங்கள், பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகின்றன என கொள்ளலாம்.

மேற்கண்ட நான்கு பொது அறிவு தாள்களும், எளிதில் பதில் அளிக்கக்கூடிய வகையில் இருந்தாலும், ஒரு மாணவன் எந்தவொரு கேள்விக்கும் பதில் அளிக்கும் தன்மையை உருவாக்கிக் கொள்வதோடு, அந்த கேள்வி அல்லது பிரச்சினை பற்றிய முழுவிவரம், காரணம், எதற்கு, ஏன், எப்படி என்று பலவித கோணங்களில் ஆராய்ந்து பார்க்கும் தன்மை மட்டுமல்லாது, கேள்விக்கு தகுந்த பதிலை அளவோடும், அர்த்தத்தோடும் அளிக்க வேண்டியது அவசியம்.

விருப்பப்பாடம்
கீழ்கண்ட பாடங்களில் ஒன்றை பிரதான தேர்வில் தேர்ந்தெடுக்க வேண்டும்.

வேளாண்மை, கால் நடை மருத்துவம் மற்றும் கால்நடை அறிவியல், மானுடவியல், தாவரவியல், வேதியியல், சிவில் பொறியியல், வணிகவியல், மற்றும் கணக்கு பதிவியல், மின்பொறியியல், புவியியல், மண்ணியல், வரலாறு, சட்டம், நிர்வாகம், கணிதம், மெக்கானிக்கல், இன்ஜினியரிங், மருத்துவ அறிவியல், தத்துவம், இயற்பியல், அரசியல், அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள், பொது நிர்வாகம், சமூகவியல், புள்ளியியல் மற்றும் விலங்கியல். இலக்கியங்கள் அரபிக், அஸ்லாமி, பெங்காலி, சைனிஸ், ஆங்கிலம், குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கனி, மைதிலி, மராத்தி, மணிப்பூரி, நேப்பாளி, ஒரிஸா, பாலி, பெர்ஷியின், பஞ்சாபி, ருஷ்யன், சமஸ்கிருதம், சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது.

புதிதாக உருவாக்கப்பட்ட இந்த பாடத்திட்டத்தில் விருப்பப்பாடம் இரண்டிலிருந்து, ஒன்றாக குறைக்கப்பட்டதோடு, மதிப்பெண்களும் 1200 யிலிருந்து. 500ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதிலும், ஒரு தாளுக்கு 250 மதிப்பெண்கள் விகிதம், இரண்டு தாள்கள் உள்ளன. விருப்பப் பாடத்திட்டத்திற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிகவும் குறைக்கப்பட்டுள்ளது தெள்ளத் தெளிவாகிறது. மேலும், தேர்வாளர்கள் ஒரு மாணவன் படித்த பாடத்தை விட, அல்லது இரண்டு பாடங்கள் படித்து பெறும் மதிப்பெண்களை விட எல்லோருக்கும் தெரிந்திருக்கும் வகையில் உள்ள பொது அறிவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்பது கண்கூடாகும். தற்போது விருப்பப்பாடம் எடுப்பதில் அதிக பிரச்சினைகள் வராது. ஏனெனில், ஒரு மாணவனோ, மாணவியோ கல்லூரியில் தாங்கள் படித்த ஒரு பாடத்தை (விருப்பப்பாடத்தில் அங்க மாக இருந்தால்) எளிதில் தேர்ந்தெடுத்து படித்து, இத்தேர்வை எழுதலாம். சில நேரம் மாணவர்கள் பட்டப்படிப்பில் படித்த பாடம் பிடிக்காமலோ அல்லது அப்பாடம் விருப்பப்பாட தொகுதியில் இல்லாமலோ இருந்தால் அவர்கள் புதியதாக ஒரு பாடத்தை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டியது அவசியமாகிறது. விருப்பப்பாடத் தேர்வில் முந்தைய அளவுக்கு கவனம் தேவையில்லை என்றாலும், இந்த பாடத்திற்கான 500 மதிப்பெண்கள் நிச்சயம் மொத்த தரவரிசை பட்டியலில் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பது உண்மை. எனவே. மாணவர்கள் தாங்கள் படித்த பாடமாக இருந்தாலும் அல்லது புதிதாக தேர்ந்தெடுக்கப்போகும் பாடமாக இருந்தாலும், அப்பாடம் பொது அறிவுத் தாள்களில் பயன்படுமா என்பதை கண்டிப்பாக தெரிந்துகொள்ள வெண்டும். பொது நிர்வாகம், அரசியல் மற்றும் அரசியல் விஞ்ஞானம் மற்றும் சர்வதேச உறவுகள், புவியியல், சமூகவியல், உளவியல், தத்துவவியல், விவசாயம் மற்றும் பொருளாதாரம் போன்ற பாடங்கள் ஏதாவது ஒரு விதத்தில் மாணவர்களுக்கு பொது அறிவுத்தேர்வில் உதவும். ஆனால், இப்பாடங்கள் மட்டுமல்லாது அனைத்து விருப்பப்பாடங்களில் இருந்தும் சிறு பகுதியாவது பொது அறிவுத்தாள்களில் இடம்பெறும் அளவிற்கு தேர்வாளர்கள் தற்போது பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.

சாதாரணமாக, புதிதாக வரும் மாணவன் விருப்பப்பாடம் தெரிவு செய்யும்போது. ஏற்கனவே இத்தேர்வில் வெற்றிகண்டவர்கள், நகர்ப்பகுதிகளில் உள்ள பயிற்சி வகுப்புகள் மற்றும் தெரிந்தவர்கள் மூலம் தேர்வை பற்றியும், எழுதும் முறை பற்றியும் அறிந்துகொள்வர். அதேநேரம், விருப்பப்பாடங்கள் ஒன்றொடொன்று சேர்த்து தேர்வில் வரும் என்ற அச்சம் இனி கொள்ளத் தேவையில்லை. அதற்கும் மேலாக எந்த விருப்பப் பாடம் அதிக மதிப்பெண்களை பெற்றுத்தரும். எது குறைவாக இருக்கும் என்று இந்த புதிய சூழ்நிலையில் எடுத்துரைப்பது என்பது கடினமான விஷயமாகும். எனவே, மாணவர்கள் தங்களுக்கு பிடித்த பாடங்கள் மற்றும் தங்களுக்கு எப்படி மற்ற தேர்வில் உதவும் என்பதை பற்றியும் அறிந்து கொண்டு, தங்களுடைய விருப்பப்பாடத்தை தேர்வு செய்வது அவசியமாகிறது.

இந்த நிலையில், மற்றுமொரு பிரச்சினை சிலருக்கு வரலாம். அதாவது கடந்த சில ஆண்டுகளாக இரண்டு விருப்பப்பாடங்களை தெரிவு செய்து படித்து வந்தவர்கள் எதை விடுவது. எதை எடுப்பது என்ற ஒரு குழப்பத்திற்கு உள்ளாகலாம். அவர்களும் எந்தவொரு பாடத்தில் அவர்கள் நம்பிக்கை அதிகமாக உள்ளதோ, அந்த ஒரு பாடத்தையே தெரிவு செய்ய வேண்டும். மேலும், செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை பார்த்து ஒரு பயிற்சி வகுப்பில் சேர்வது தவறான முடிவாகும். எனவே, தீர ஆராய்ந்து அந்த பயிற்சி வகுப்புகளின் உண்மையான சாதனைகள், அங்கு படித்து வெற்றிபெற்ற மாணவர்களின் தகவல்கள் மற்றும் அங்கு சொல்லித்தரும் ஆசிரியர்கள் போன்ற காரணிகளை பொறுத்தே ஒருவர் பயிற்சி வகுப்பில் சேருவதா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும். சாதகங்களையும் சாதகங்கள் அல்லனவற்றையும் கணக்கில் வைத்து, முடிவு எடுப்பது இன்னும் சிறப்பான செயலாகும்.

தேர்வுக்கு தயார் செய்வது எப்படி?
சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வரும் பெரிய ஒரு சந்தேகம் எத்தனை மணிநேரம் படிப்பது, எவ்வளவு படிப்பது, என்பதுதான். விண்ணப்பதாரர் ஒரு நாளைக்கு 10லிருந்து 12 மணி நேரம் படிக்கலாம். சிலர் 18விருந்து 20 மணி நேரம் படிப்பதாக கூறுவார்கள். இது சாத்தியமானது அல்ல. தம்மிடம் எவ்வளவு திறமை உள்ளது என்பதை உணர்ந்து அதற்கேற்ப ஒரு கால அட்டவணையை வகுத்து. அதன்படி படித்து தங்களை தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்வது மிக முக்கியமானதாகும். தேர்வுகள் சமயத்தின்போது சரி விகிதத்தில் உணவு உட்கொள்ள வேண்டும். தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ளும்போது நல்ல உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டியது அவசியம். உடலும், உள்ளமும் ஒய்வு எடுக்கும் வகையில் போதுமான அளவுக்கு தூங்க வேண்டும் என்பது ஒரு கட்டாய தேவையாகும். தூங்கி எழுந்தபிறகு உடலும், புத்துணர்ச்சியோடு இருக்கும்போது படித்தல் மிகவும் நல்லது. அப்படி செய்வதால் படித்தவற்றை எளிதில் கிரகித்து மனதில் நிறுத்திக்கொள்ள முடியும். படித்த பாடங்களை மீண்டும் திரும்பப் படிக்கும்போது முக்கியமான குறிப்புகளை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். முதலாவது முறை படிக்கும்போது தேவையில்லாதவற்றை நீக்கிவிட்டு படிக்க வேண்டியதை பாதியாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்களது பள்ளிப்பாடப் புத்தகங்களை முழுவதுமாக படிக்க வேண்டும். இது பொது அறிவு என்ற அடித்தளத்தை வலுவாக அமைத்திட உதவும்.

தற்போது கேட்கப்படும் பொது அறிவு கேள்விகள் எல்லாம், நேரடியாக இல்லாமல் மறைமுகமாக இருக்கும் என்பதால், ஆழ்ந்து படித்தவர்கள் மட்டுமே பதிலுரைக்க முடியும் என்ற நிலை தற்போது சூழ்ந்து இருப்பதால், எப்படி கேட்டாலும் பதில் அளிக்கக்கூடிய வகையில், படித்து தெளிவு பெறும் சூழலுக்கு வந்துவிட வேண்டும். அகில இந்திய வானொலியின் காலை, மாலை செய்தி அறிக்கைகளை கேட்பது மிக மிக அவசியம். இந்த செய்தி அறிக்கைகள் தேசிய மற்றும் உலக அளவிலான அன்றாட நிகழ்வுகளை அறிவு பெட்டகத்தில் கொண்டு சேர்க்கும். ஏனெனில், அகில இந்திய வானொலியின் தில்லியிலிருந்து ஒலிபரப்பப்படும் இரவு செய்திகள், அதைத் தொடர்ந்து நடைபெறும் கலந்துரையாடல்கள், ஆகியவற்றை மையப்படுத்தி கடந்த சில ஆண்டுகளாக சிவில் சர்வீஸ் பிரதான தேர்வுகளில் கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், ஒருவர் அகில இந்திய வானொலி செய்தியை முதல் நாள் இரவு கேட்டு தெரிந்தபின்பு, அதே நிகழ்வை, அதே செய்தியை மீண்டும் மறுநாள் செய்தித்தாள்களில் படிப்பதோடு, இன்னும் சில காலம் கழித்து போட்டித் தேர்வுகளுக்கு என்று வெளியிடப்படும் மாதாந்திர சஞ்சிகைகள் மூலமாக, அதே நிகழ்ச்சியை படிக்கும்போது அது ஞாபகத்தில் பளிச்சிடும். நிகழ்வுகள் குறித்த தகவல் களஞ்சியத்திற்கு நம்மை நாள்தோறும் நகர்த்திச் செல்லும் நாளேடுகள், சஞ்சிகைகள், பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிடும் செய்திகள் ஆகியவற்றை நன்கு தயார் செய்து கொள்ளவேண்டும். ஊடகங்களோடு உலா சென்றால் பொது அறிவுத்தாள்கள் அனைத்தையும் சந்திப்பது மிகவும் எளிய செயலாகும். மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் புத்தக வெளியீட்டுப்பிரிவு வெளியிடும்.

இந்தியா இயர்புக், யோஜனா, குருக்க்ஷேத்திரா ஆகியவற்றையும் படிக்க வேண்டும். இந்தப் புத்தகங்கள் இந்தியா பற்றிய அனைத்து விவரங்களையும் முழுமையாக அறிந்து கொள்ள உதவிடும்.

தேர்வை சந்திப்பது எப்படி?
ஒரு கேள்விக்கு எத்தனை வார்த்தைகளில் பதில் எழுத வேண்டும் என கேள்வித்தாளில் குறிப்பிடப்பட்டுள்ளதோ, அவ்வாறே பதில் அமைந்திட வேண்டும். குறிப்பிட்ட வார்த்தைகளுக்கு மேல் அதிகமாக எழுதினால் மதிப்பெண்களை கூடுதலாக பெற்றுவிட முடியாது. எழுதும் நேரமும் விரயமாகிவிடும். ஒவ்வொரு கேள்விக்குமான பதிலை எழுதிவிட்டு வார்த்தைகளை எண்ணிக் கொண்டிருக்கக் கூடாது. சரியான முயற்சியில் பயிற்சி மேற்கொள்ளும் விண்ணப்பதாரர்கள் ஒரு வரியில் எத்தனை வார்த்தைகள் இடம்பெறும். ஒரு பக்கத்திற்கு எத்தனை வரிகள் பிடிக்கும் என்பதை எளிதாகக் கணக்கிட்டு, கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஏற்ப பதில் எழுத முடியும். மதிப்பீடு செய்பவர் எளிதில் படித்துப் பார்க்கும் வகையில் பதில்கள் தெளிவாக இருக்க வேண்டும். முக்கியமான பதில்களை அடிக்கோடிட்டுக் காட்டுவது நல்லது. கட்டுரை என்றால் ஒவ்வொரு பத்தியாக எழுத வேண்டும். ஒவ்வொரு பத்தியும் ஒரு புதிய பதிலுடன் தொடங்கப்பட வேண்டும். ஒரு வரிக்கும் மற்றொரு வரிக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்க வேண்டும். எழுதும் எழுத்துக்கள் ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரே சீராக இருக்கவேண்டும். சிலர் துவக்கத்தில் நன்றாக எழுதிவிட்டு பின்னர் நேரம் ஆகிவிட்டதே என்ற நெருக்குதலுக்கு உள்ளாகி அவசர கதியில் எழுதும்போது எழுத்துக்கள் கிறுக்கலாகி மோசமாகிவிடும். மோசமான கையெழுத்து, மதிப்பீட்டாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்திவிடும். அடுத்தவர் எரிச்சல் ஆகாது என்பது போல, மதிப்பீட்டாளர் எரிச்சல் பட்டால், விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் கரைந்து போகும். ஒவ்வொரு மாணவனும் ஒரு மதிப்பீட்டாளராக தம்மை பாவித்துக் கொண்டால் இதை உணர முடியும்.

நேர்முகத்தேர்வு
சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் நேர்முகத்தேர்வு பற்றிய ஒரு அச்சம் நிச்சயம் உண்டு. அதிலும், பிராந்திய மொழிகளில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, ஆங்கிலப்பாடத்தை கல்லூரியில் படித்துவிட்டு, ஆங்கிலத்தில் பேசுவதற்கே யோசனை செய்யும் அவர்கள், இந்தியாவின் மிகப்பெரிய தேர்வில் எப்படி ஆங்கிலத்தில் பேசுவது என்று நினைக்கலாம். அதைப்பற்றி எந்த கவலையும் கொள்ளத்தேவையில்லை. சாதாரணமாக, தாங்கள் படிக்கும் காலத்திலிருந்து இதுவரை என்னென்ன அனுபவம் கண்டார்களோ, அதுபற்றியும் அவர்கள் ஊர், மாவட்டம் மற்றும் மாநிலம் சம்பந்தப்பட்ட கேள்விகளே அதிகமாக கேட்கப்படும். பொது அறிவும், அதை பற்றிய பதிலும் ஒரே நாளில் வளர்ந்து விடாது. மழை துளி போல சிறுகச்சிறுக பெருகி வெள்ளமாக உருவாவதுதான் ஒரு மனிதனின் மொத்தப்பொது அறிவு. அதுமட்டுமல்ல மாணவர்கள் நேர்முகம் என்றால், அது கேள்வி, பதில் என்றே நினைக்கலாம். ஆனால், சிவில் சர்வீஸ் தேர்வுகளின் நேர்முகம் என்பது, முழுமையான தன்னைப்பற்றி நேர்முகத் தேர்வு குழுவினரிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு நிகழ்வாகும். எனவே, எது தெரிகிறதோ அதை அச்சமில்லாமல், நேரடியாக பதில் சொல்லலாம். தவறாக சொல்லி விட்டோமோ என்று கவலை கொள்ளத்தேவையில்லை. தேர்வுக்குழுவினர் எதிர்பார்ப்பது உண்மையைத்தான். தெரியாது என்ற உண்மையைத்தான், மழுப்பல் அல்ல. மழுப்பல் பதிலை தேர்வுக் குழுவினர் அறவே வெறுப்பார்கள் என்பது உண்மை. நேர்முகத்தேர்வில் தர்க்கம் செய்வது அவசியம் அற்றது. சில நேரம் தர்க்கம் செய்ய நேர்ந்தால் நியாயப்படுத்தப்படும் பதில் புறந்தள்ள முடியாதவாறு அமையவேண்டும். ஆகவே, தெரிந்த விஷயத்தை தெளிவாகவும், அமைதியாகயும் எடுத்துரைப்பதன் மூலம் தேர்வுக்குழுவினரை நம் வசப்படுத்த முடியும். குளங்கள், கிணறுகள், கண்மாய்கள் போன்றவை ஒரே நாளில் மழையில் நிரம்பக் கூடும். ஆனால் மிகப்பெரிய அணைகளின் நீர் மட்டம் தொடர்ந்து பெய்யும் மழையால் படிப்படியாகத்தான் உயரும்.
Read More »

பொதுஅறிவு வினா- விடைகள்



  • அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள் – போலிக்கால்கள்
  • வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது – ஹார்மோன்கள்
  • புவி நாட்டம் உடையது – வேர்
  • இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் – வால்வாக்ஸ்
  • டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம் – புகையிலை
  • ரேபிஸ் – வைரசினால் உண்டாகிறது.
  • முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது – ஹைடிரா
  • நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு – கிளாமிடோமானஸ்
  • மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி – பிளாஸ்மோடியம்
  • அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு – மண்புழு
  • தாவர வைரஸ்களில் காணப்படும் மரபு பொருள் – ஆர்.என்.ஏ
  • எய்ட்ஸ் நோயை உருவாக்கும் வைரஸ் – எச்ஐவி
  • பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம் – தந்தித் தாவரம்
  • இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் – ஹீமோகுளோபின்
  • தாவர உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு – யானை
  • ஊன் உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு – சிங்கம்
  • அனைத்து உண்ணிக்கு உதாரணம் – மனிதன்
  • விழுங்கும் முறை உணவூட்டம் கொண்டது – அமீபா
  • ஒட்டுண்ணி உணவூட்டம் உடையது – பிளாஸ்மோடியம்
  • அகாரிகஸ் பெற்றுள்ள உணவூட்டம் உடையது – பிளாஸ்மோடியம்
  • சக்தி தரும் உணவுச் சத்து – கார்போஹைட்ரேட்
  • தனித்த சுரப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் – முதல் வகை நெம்புகோல்
  • நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் – ஆர்க்கிமிடிஸ்
  • எதில் நிலையாற்றில் உள்ளது – நாணேற்றப்பட்ட வில்
  • பற்சக்கர அமைப்புகளின் பெயர் – கியர்கள்
  • புறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் தலங்கலைத் தரும் தாவரம் – பிரையோஃபில்லம்
  • ஒரு பொருளால் புறவெளியில் அடைபடும் பகுதியானது அதன் கன அளவு.
  • முதல் 10 இயல் எண்களின் சராசரி – 5.5
  • -5 முதல் 5 முடிய உள்ள முழுக்களின் கூட்டுச்சராசரி – 0
  • 5 எண்களின் கூட்டுச்சராசரி 20. அவற்றிலிருந்து ஒரு எண்ணை நீக்கினால் அவற்றின் கூட்டுச்சராசரி 15 எனில் நீக்கப்பட்ட எண் – 40
  • எதிர் பக்கங்கள் இணையாக உள்ள நாற்கரம் – சாய்சதுரம்
  • π-ன் தோராய மதிப்பினைக் கொடுத்தவர் – பிரம்ம புத்திரா
  • வடிவியலின் அடிப்படைக் கருத்து – புள்ளி
  • சூத்திரங்களைப் பயன்படுத்தி பரப்பளவு காண இயலாதவை – கூம்பு
  • ஒரு தளத்தில் அமைக்க இயலாத வடிவியல் உருவங்கள் – ஐங்கோணம்
  • முக்கோணத்தின் வகைகள் – 6
  • பல கோணத்தின் அனைத்துப் பக்கங்களின் நீளங்களும் சமமாக இருப்பின் வில் என்கிறோம்.
  • நீளம், அகலம், உயரம் போன்றவை இல்லாத ஒன்று கணிதத்தில் வட்டம் ஆகும்.
  • வடிவியலின் தந்தை – ரிண்ட் பாப்பிதரஸ்
  • அரைக்கோணத்தின் புறப்பரப்பு – 3πr2
  • 360 டிகிரி என்பது 2 π ரேடியன்கள்.
  • 1000 கி.கி என்பது – 1 டன்
  • தொகுதியானது பகுதியை விடப் பெரிய எண்ணாகவோ அல்லது சமமாகவோ இருப்பின் அந்த பின்னங்கள் தகா பின்னங்கள் எனப்படும்.
  • ஒன்றை விடக் குறைவான பின்னம் – தகு பின்னம்
  • 3/5 என்பது எவ்வகைப் பின்னம் – தகு பின்னம்
  • 4/7-ன் சமான பின்னம் – 16/28
  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பின்னங்கள் ஒரே மதிப்பைப் பெற்றிருந்தால் அவற்றை சமான பின்னம் என்பர்.
  • 0.50 என்பது ஒரு தகு பின்னம் பின்னம்.
  • மிகச்சிறிய 4 இலக்க எண் – 1000
  • ஒரு வருடத்தில் உள்ள வாரங்களின் எண்ணிக்கை – 52
  • நிறையை அளக்க பயன்படுத்தும் S. I அலகு முறை – கி.கி.
  • S. I அலகு முறையின் அடிப்படை அலகுகள் – லிட்டர்
  • கடிகாரத்தில் நிமிட முள் 10 ஆம் எண்ணிலிருந்து 12 ஆம் எண்ணிற்கு செல்ல ஆகும் விநாடிகள் – 600
  • ஓர் எண்ணை இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட எண்களின் பெருக்கலாக பிரிக்க முடியுமானால் அந்த எண்களே காரணிகள் எனப்படும்.
  • வேரின் மாற்றுருக்கள் – ஆணிவேர் மாற்றுரு, சல்லிவேரின் மாற்றுரு
  • ஆணிவேரின் மாற்றுருக்கு எடுத்துக்காட்டு – கேரட், முள்ளங்கி, பீட்ரூட்
  • கூம்பு போன்று மேற்பகுதி அகன்றும், கீழ்பகுதி குறுகியும் காணப்படும் மாற்றுருக்கு உதாரணம் – கேரட்
  • நேஃபிபார்ம் வேருக்கு உதாரணம் – பீட்ரூட்
  • மறுசுழற்சி செய்யும் விலங்கினம் – மண்புழு
  • இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு உதாரணம் – சப்பாத்திக்கள்ளி
  • இடைநிலத் தாவரத்திற்கு உதாரணம் – பலா
  • மூன்றாம் நிலை நுகர்வோருக்கு உதாரணம் – கழுகு
  • இரண்டாம் நிலை நுகர்வோருக்கு உதாரணம் – பாம்பு
  • வரிக்குதிரை காணப்படும் நில வாழிட சூழ்நிலை – புல்வெளிப்பிரதேசம்
  • பென்குயின்கள் காணப்படும் வாழிடம் – தூந்திரப்பிரதேசம்
  • எலி ஒருமுறை போடும் குட்டிகளின் எண்ணிக்கை – 10-15
  • மழைநீருக்கு ஆதாரம் – காடுகள்
  • சூழ்நிலை பாதிப்படைவதற்கு முக்கியக் காரணம் – மக்கள்தொகை
  • மண்ணுக்கும் மண்புழுவுக்கும் உள்ள தொடர்பைக் கண்டறிந்தவர் – சார்லஸ் டார்வின்
  • கழிவு நீரில் வாழும் கைராமமஸ் இளம் உயிரி சிதைப்பவைகளில் ஒன்றாகும்.
  • பிளேக் நோய்க்கான கடத்தியாக செயல்படுவது – சீனோப்சில்லா
  • பிளேக் நோய்க்கு காரணமான பாக்டீரியா – எர்சினியாபெஸ்டிஸ்
  • இரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் – இவியா பிரேசியன்சிஸ்
  • இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர் – கிறிஸ்டோபர் கொலம்பஸ்
  • இரப்பர் தாவரரத்திலிருந்து கிடைக்கும் பொருளுக்கும் இர்ப்பர் பெயரிட்டவர் – ஜோசப் பிரிஸ்ட்லி
  • இரப்பர் தாவரத்தின் தாயகம் – தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் பள்ளத்தாக்கு
  • தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் அதிக நிலப்பரப்பில் இர்ப்பர் சாகுபடி நடைபெறுகிறது – கன்னியாகுமரி
  • இரப்பர் மரத்திலிருந்து கிடைக்கும் பால் போன்ற திரவத்தின் பெயர் – லேடக்ஸ்
  • இட்லி பூவின் தாவரவியல் பெயர் – இக்சோரா
  • மகரந்தத் தூள் சூலக முடியை அடைவதன் பெயர் – மகரந்தச் சேர்க்கை
  • இரும்பை கொண்டுள்ள ஹிமோகுளோபின் எனும் புரதத்தை கொண்ட அணு எது? – சிவப்பு அணு
  • இரத்ததிற்க்கு சிவப்பு நிறத்தை அளிப்பவை எது? – ஹிமோகுளோபின்
  • வாயுக்களை கடத்த உதவுவது எது? – ஹிமோகுளோபின்
  • உட்கரு உள்ள ரத்த அணு எது? – வெள்ளை அணு
  • ஒரு கன மி. மீட்டர் ரத்ததில் காணப்படும் வெள்ளை அணுக்கள் எவ்வளவு? – 5,000 முதல் 10,000 வரை
  • நோய்க்கிருமிகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் அனு எது? – வெள்ளை அணு
  • ரத்தத்தில் காணப்படும் அணுக்களில் மிகச்சிறியது எது? – தட்டை அணுக்கள்
  • ஒரு கன மி. மீட்டர் ரத்ததில் காணப்படும் தட்டை அணுக்கள் எவ்வளவு? – 1,50,000 முதல் 3,00,000 வரை
  • உடல் வெப்பநிலையை உடல் முழுவதும் சமமாக பரவச்செய்து உடல் வெப்பநிலையை ஒருங்கினைப்பவை எது? – ரத்தம்
  • ரத்தம் ஒரு__________ கரைசல் – தாங்கல் கரைசல்
  • உடலில் கார, அமில தன்மையை நிலை நிறுத்துவது எது? – ரத்தம்
  • ரத்த சுற்றோட்ட மண்டலத்தை கண்டறிந்தவர் யார்? – வில்லியம் ஹார்வி
  • வெள்ளை அணுக்களின் வாழ் நாள் – 4 வாரங்கள்
  • 1971 ம் ஆண்டு உலக நாடுகள் அனைத்தும் பொதுவாக ஏற்றுக்கொண்ட அலகு முறை எது? – பன்னாட்டு அலகு முறை (SI – System International)
  • SI அலகு முறையில் உள்ள அடிப்படை அலகுகள் எத்தனை? – ஏழு
  • SI அலகு முறையில் உள்ள துணை அலகுகள் எத்தனை? – இரண்டு (ரேடியன் மற்றும் ஸ்டிரேடியன்)
  • நீளத்தின் அலகு என்ன? – மீட்டர் (வெற்றிடத்தில் ஒளி 1/299792458 வினாடி பாயும் தூரம்)
  • நிறையின் அலகு என்ன? – கி.கிராம்
  • காலம் / நேரத்த்தின் அலகு என்ன? – வினாடி
  • மின்னோட்டதின் அலகு என்ன? – ஆம்பியர்
  • வெப்பநிலையின் அலகு என்ன? – கெல்வின் (பனிக்கட்டி, நீர் மற்றும் நீராவியும் ஒருங்கே அமைந்த வெப்பநிலையில் 1/273.15 பகுதியாகும்)
  • விசையின் அலகு என்ன? – நியுட்டன்
  • வேலையின் அலகு என்ன?- ஜுல்
  • பொருளின் அளவு எதனால் குறிக்கப்படுகிறது? – மோல்
  • ஒளிச்செறிவின் அலகு என்ன? – கேண்டிலா
  • தளக்கோணத்தின் அலகு என்ன?- ரேடியன் (ஓர் ஆரம் நீளமுள்ள வில் வட்ட மையத்தில் தாங்கும் கோணம்)
  • திண்மக் கோணத்தின் அலகு என்ன? – ஸ்டிரேடியன்
  • துணைக்கோலைக் கொண்டு துல்லியமாக அளவிட வெர்னியர் அளவியை கண்டுபிடித்தவர் யார்? – பியரி வெர்னியர் (பிரான்ஸ்)
  • வெர்னியர் அளவியில் மீச்சிற்றளவு என்பது? – (முதன்மை கோல் பிரிவு – துணைக்கோல் பிரிவு) =1 மி.மீ-0.9 மி.மீ = 0.01 செ.மீ
  • வெர்னியர் கோலில், துணைக்கோலின் சுழி, முதன்மைக்கோலின் சுழிக்கு வலப்புறமோ அல்லது இடப்புறமோ அமைவது_____எனப்படும் – சுழிப்பிழை எனப்படும்
  • வெர்னியர் அளவியில் இரண்டு தாடைகள் இணையும் போது துணைக்கோலின் சுழி, முதன்மை கோலின் சுழிக்கு வலப்புறம் அமைந்தால் அப்பிழை_________எனப்படும் – நேர் பிழை
  • வெர்னியர் அளவியில் இரண்டு தாடைகள் இணையும் போது துணைக்கோலின் சுழி, முதன்மை கோலின் சுழிக்கு இடப்புறம் அமைந்தால் அப்பிழை_________எனப்படும் – எதிர் பிழை
  • பொருளின் நீளத்தை ஒரு மி.மீட்டரில் நூறில் ஒரு பங்கு அளவிற்கு துல்லியமாக அளவிட பயன்படுவது எது? – திருகு அளவி
  • மெல்லிய கம்பி, தாள் மற்றும் தகடு ஆகியவற்றின் தடிமனை அளவிட பயன்படுவது எது? – திருகு அளவி
  • ஒரு நிலையான மறைக்குள் இயங்கும் திருகை சுற்றும் போது அதன் முனை முன்னோக்கி நகரும் தொலைவு_____க்கு நேர் தகவில் இருக்கும் – சுற்றப்பட்ட சுற்றுகளுக்கு நேர் தகவில் இருக்கும்
  • ஒரு பொருளின் நிறையை ஒரு மி.கிராம் அளவிற்க்கு துள்ளியமாக அளவிட பயன்படும் தராசு எது?- இயற்பியல் தராசு
  • இயற்பியல் தராசில் மிக குறைந்த எடை கல் எவ்வளவு? – 10 மி. கிராம்
  • இயற்பியல் தராசில் குறிமுள், அலைவுக்குப்பின் அளவுகோல் வந்து நிற்கும் புள்ளி______எனப்படும் – நிலைப்புள்ளி எனப்படும்
  • திருகு அளவியின் மீச்சிற்றளவு எவ்வளவு? – 0.01 மி.மீ
  • ஒரு பொருளில் அடங்கியுள்ள பருப்பொருள்களின் கன அளவு அதன்______எனப்படும் – நிறை எனப்படும்
  • ஊசல் கடிகாரத்தின் தத்துவத்தை கண்டறிந்தவர் யார்? – கலிலியோ
  • மொகஞ்சதாரோவில் இருந்த பெரிய குளம் எதனால் கட்டப்பட்டது? – செங்கற்கள் மற்றும் சுண்ணாம்பும் மணலும் சேர்ந்த கலவை
  • மொகஞ்சதாரோவில் காணப்பட்ட மிகப்பெரிய கட்டிட அமைப்பு எது?- தானியக்களஞ்சியம்
  • செல் கொள்கையை முன் மொழிந்தவர்கள் யார்? – தியோடர் ஸ்ச்வான் மற்றும் ஜேக்கப் ஸீலீடன்
  • உயிரனங்களின் அடிப்படை அலகு எது? – செல்
  • செல் பற்றிய படிப்பிற்க்கு_______என்று பெயர் – செல் அமைப்பியல் (Cytology) அல்லது செல் உயிரியல்
  • செல்லைக் கண்டறிந்தவர் யார்? – ராபர்ட் ஹீக்
  • செல்லின் கட்டுப்பாட்டு மையம் எது? – உட்கரு
  • உட்கருவை கண்டறிந்தவர் யார்? – ராபர்ட் ப்ரெளன்
  • குரோமாடின் வலை காணப்படும் இடம் எது? – உட்கரு
Read More »

தாவரவியல் - உயிரியியல் பொது அறிவு வினா – விடை



  1. முள்ளங்கியில் காணப்படும் வேர்த்தொகுப்பு - ஆணி வேர்த்தொகுப்பு
  2. நெல்லில் காணப்படும் வேர்த்தொகுப்பு - சல்லி வேர்த்தொகுப்பு
  3. முண்டு வேர்கள் கொண்ட தாவரம்  -   சோளம், கரும்பு
  4. கொத்து வேர்கள் கொண்ட தாவரம் -  டாலியா
  5. பின்னுகொடி தாவரம் - அவரை
  6. ஏறு கொடி தாவரம் - மிளகு, வெற்றிலை
  7. பூண்டின் நறுமணத்திற்குக் காரணம் அதில் உள்ள - சல்பர் உள்ள சேர்மம்
  8. டெங்கு காய்ச்சலைத் தோற்றுவிக்கும் வைரஸ் - ஃபிளேவி வைரஸ்
  9. தூதுவ ஆர்.என்.ஏ.வில் காணப்படும் ரிபோசோம்களின் தொகுப்பின் பெயர் - பாலிசோம்
  10. பாக்டீரியா இருசமப் பிளவு முறையில் இனப்பபெருக்கம் செய்கிறது.
  11. தாவரங்கள் சவ்வூடுபரவல் முறையில் நீரை உறிஞ்சுகின்றன.
  12. பூத்தலில் பங்குபெறும் ஹார்மோன் – ஃபுளோரிஜென்f
  13. இரு சமமான கரங்கலைக்கொண்ட குரோமோசோமின் பெயர் - மெட்டாசென்ட்ரிக் குரோமோசோம்
  14. டி.என்.ஏ. ஆர்.என்.ஏ.வாக மாற்றப்படும் நிகழ்ச்சி - படியெடுத்தல்
  15. முழுமையடைந்த கருவுற்ற முட்டை என்பது - சைகோட்
  16. நெல்லில் காணப்படும் கனி வகை - காரியாப்சிஸ்
  17. ரோமங்கள் கற்றையாக அமைந்திருக்கும் விதைகள் - கோமோஸ் விதைகள்
  18. படியெடுத்தலில் பங்கு பெறும் நொதி - ஆர்.என்.ஏ.பாலிமரேஸ்
  19. மிகப்பெரிய முட்டையினை இடும் உயிரினம் - நெருப்புக்கோழி
  20. அக்ரோசோமின் முக்கியப் பணி - அண்டத்தினுள் நுழைதல்
  21. இரத்தச் செல்களை உண்டாக்கும் மூலச் செல்களின் பெயர் - ஹீமோபாயிடிக் செல்கள்
  22. பாம்புக் கடிக்கு விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படும் தாவரம் - ராவுல்ஃபியா சர்பன்டைனா (சர்ப்பகாந்தி)
  23. ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை - டாக்டர். சாமுவேல் ஹென்மென்
  24. 1909ல் வார்மிங் என்பவர் நீர்த் தேவையின் அடிப்படையில் தாவரங்களை எத்தனை வகைகளாகப் பிரித்துள்ளார் - மூன்று
  25. கிரைசோகிராப் கருவியைக் கண்டுபிடித்த இந்திய அறிவியலறிஞர் - ஜே.சி. போஸ்
  26. மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சு விடுகிறான் - 16 முதல் 18 முறை
  27. ஒடு தண்டு தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - புல்
  28. மனித உடலில் மிகவும் கனமான உறுப்பு - தோல்
  29. வேம்பிலிருந்து கிடைக்கும் பூச்சிக் கொல்லியின் பெயர் - அஸாடிராக்டின்
  30. ஆன்டிஜென்கள் இல்லாத இரத்தத் தொகுதி - O இரத்தத் தொகுதி
  31. எரிசக்தி ஆற்றலைத் தயாரிக்க உதவும் தாவரங்கள் - ஜட்ரோபா மற்றும் யூபோர்பியா
  32. முட்டைத் தாவரம் என அழைக்கப்படுவது - கத்தரி
  33. பூச்சிகளில் காணப்படும் முட்டை வகை - சென்ட்ரோலெசித்தல்
  34. முதலாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் - பாம்பு
  35. இரண்டாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் - கழுகு
  36. பறவை முட்டையின் கரு உணவில் காணப்படும் முக்கிய புரதங்கள் -  பாஸ்விடின், லிப்போ விட்டலின்
  37. மனிதனின் கருவுறுகாலம் - 280 நாள்கள்
  38. அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள் - போலிக்கால்கள்
  39. வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது - ஹார்மோன்கள்
  40. புவி நாட்டம் உடையது - வேர்
  41. இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் - வால்வாக்ஸ்
  42. யானையின் கருவுறு காலம் - 17 - 20 மாதங்கள்
  43. டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம் - புகையிலை
  44. முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது - ஹைடிரா
  45. நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு - கிளாமிடோமானஸ்
  46. மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி - பிளாஸ்மோடியம்
  47. அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு - மண்புழு
  48. பன்றியிலிருந்து மனிதனுக்கு உறுப்பு ஒட்டு செய்யப்படுவது - ஜெனோகிராப்ட்
  49. விலங்கினங்களில் முதன் முதலாகத் தோன்றும் நிணநீர் உறுப்பு - தைமஸ் சுரப்பி
  50. நடமாடும் மரபுப் பொருள் எனப்படுவது - டிரான்ஸ்போசான்கள்
  51. இடியோகிராம் என்பது - குரோமோசோம்களைக் குறிக்கும் படம்
  52. ஆண்களுக்கு செய்யப்படும் நிரந்தர பிறப்புக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை முறை - வாசக்டமி
  53. தற்காலத்திய தேன் கூட்டில் அமைக்கப்பட்டிருப்பது - 5 அறைகள்
  54. எலும்புகளில் காணப்படும் குழாய்களின் பெயர் - *ஹாவர்ஷியன் குழாய்
  55. ஆக்சிஜன் மிக்க இரத்தம் இருக்கும் பகுதி - இடது வெண்ட்ரிக்கிள்
  56. விலங்குகளின் உடலைச் சுற்றி புறப்பரப்பில் காணப்படும் திசு - எபிதீலியத் திசு
  57. அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் - நுரையீரல் தமனி
  58. மனிதனுக்கு நிமோனியா சளிக் காய்ச்சல் அடினோ வைரசால் ஏற்படுகிறது.
  59. நம் உடலில் காணப்படும் தசைகள் நம் உடலின் எடையில் பங்கு வகிக்கும் சதவீதம் - 30 சதவீதம்
  60. நரம்புத் திசுவின் அடிப்படை அலகு - நியுரான்
  61. சுவாசக் கட்டுப்பாட்டு மையமாக செயல்படுவது - முகுளம்
  62. நிணநீர் சுரப்பிகளில் உருவாவது - லியூக்கோசைட்டுகள்.
  63. கிரேவின் நோயுடன் தொடர்புடைய சுரப்பி - தைராய்டு சுரப்பி
  64. மனித ஆண்களின் மூளையின் எடை சுமார் - 1400 கிராம்
  65. செல்லினைக் கண்டறிந்தவர் - இராபர்ட் ஹூக்
  66. உட்கருவைக் கண்டுபிடித்தவர் - இராபர்ட் பிரெளன்
  67. செல் கொள்கையை முன் மொழிந்தவர்கள் - தியோடர் ஸ்ச்வான், ஜேக்கப் ஸ்லீடன்
  68. பாக்டீரியாவைக் கண்டறிந்தவர் - ஆன்டன் வால்லூவன் ஹூக்
  69. புரோட்டோ பிளாசத்தைக் கண்டறிந்தவர்கள் - பர்கிஞ்சி, மோல்
  70. புரோகேரியாட் செல்லிற்கு எடுத்துக்காட்டு - நாஸ்டாக்
  71. மிகவும் எளிய செல்லமைப்பைக் கொண்ட செல்கள் புரோகேரியாட்டு செல்கள் எனப்படும்
  72. ஸ்கிளிரென்கைமா லிக்னின் செல்லின் இரண்டாம் நிலை செல்சுவரால் ஆக்கப் பட்டிருக்கிறது.
  73. பறவைகளின் புறச்சட்டகம் - இறகுகள்
  74. கொனிடியங்களை உற்பத்தி செய்யும் அமைப்பு -  பைலைடு
  75. கழிவு நீக்க மண்டலத்தின் அடிப்படைச் செயல் அலகு - நெஃப்ரான்
  76. தவளையின் இதயத்தில் காணப்படும் அறைகளின் எண்ணிக்கை - மூன்று
  77. களைக்கொல்லியாகப் பயன்படுத்தப்படும் செயற்கை ஹார்மோன் - 2,4-D பீனாக்சி அசிட்டிக் அமிலம்
  78. கடவுளின் முதற்கோவிலாகக் கருதப்படுவது - காடுகள்
  79. ஊசியிலைக் காடுகளின் வேறு பெயர் - போரியல் காடுகள்
  80. புறாவின் விலங்கியல் பெயர் - கொலம்பியா லிவியா
  81. தக்காளி தாவரத்தின் உயிரியல் பெயர் - லைகோபெர்சிகான் எஸ்குலண்டம்
  82. தரையொட்டிய நலிந்த தண்டுடைய தாவரத்திற்கு உதாரணம் - ட்ரைடாக்ஸ் (வெட்டுக் காயப்பூண்டு)
  83. தாவரங்கள் தங்களின் உணவைத் தயாரித்துக் கொள்ளத் தேவைப்படும் வாயு - கார்பன்-டை-ஆக்ஸைடு
  84. நாள் ஒன்றுக்கு மணித உடலிலிருந்து வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு - 1.5 - 2 லிட்டர்
  85. தவளையின் இரப்பையின் மேற்பகுதியின் பெயர் - கார்டியாக்
  86. தண்டில் உள்ள சிறுதுளைகளின் பெயர் - லென்டிசெல்
  87. இலைத் துளையின் இரு மருங்கிலும் அமைந்துள்ளது - காப்பு செல்கள்
  88. ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப்படும் வாயு - ஆக்ஸிஜன்
  89. உழவனின் நண்பன் - மண்புழு
  90. சிதைப்பவை - காளான்
  91. உயிர்க்காரணி - பாக்டீரியா
  92. முதன்முதலில் இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர் -கிறிஸ்டோபர்
  93. பென்குயின்கள் காணப்படும் வாழிடம் - துருவப் பிரதேசம்
  94. வரிக்குதிரைகள் காணப்படும் நில வாழிட சூழ்நிலை -  புல்வெளிப்பிரதேசங்கள்
  95. விலங்கு மிதவை உயிரி - ஆஸ்ட்ரோகோடுகள்
  96. இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - சப்பாத்திக்கள்ளி
  97. மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தப் பயன்படும் தாவரம் - கீழாநெல்லி
  98. புறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் துலங்கலைத் தரும் தாவரம் - பிரையோஃபில்லம்
  99. சக்தி தரும் உணவுச் சத்து - கார்போஹைட்ரேட்
  100. ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும் வெள்ளையணு - லிம்ப்போசைட்டுகள்
  101. வேதியாற்றலை இயக்க ஆற்றலாக மாற்ற உதவும் செல் - தடை செல்கள்
  102. பெரியம்மையை உண்டாக்கும் வைரஸ் - வேரியோலா வைரஸ்
  103. நாளமில்லா சுரப்பிகள் ஹார்மோன்களைச் சுரக்கிறது.
  104. பிறக்கும்போதே காணப்படும் தைராய்டு குறைப்பு நிலையின் பெயர் - கிரிட்டினிசம்
  105. இரத்தத்தில் ஆக்ஸிஜனைச் சுமந்து செல்லும் திறனைக் குறைப்பது - கார்பன் மோனாக்ஸைடு
  106. இரத்த உறைவைத் தடுக்க அட்டையின் உமிழ் நீரில் காணப்படும் பொருள் - ஹிருடின்
  107. கார்பஸ் லூட்டியம் சுரப்பது - ரிலாக்சின்
  108. பூனை மீன்களின் பொதுவான தமிழ்ப் பெயர் - விரால்
  109. செயற்கையான சிறுநீரகம் எனப்படுவது - டயலைசர்
  110. சிறுநீரகத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு விகிதம் - 20 -25 சதவீதம்
  111. மனித இதயத்தின் பேஸ் மேக்கர் ஆக வேலை செய்யும் பகுதி -எஸ்.ஏ. பகுதி
  112. சிறுநீரில் காணப்படும் யூரியாவின் அளவு - 2 சதவீதம்
  113. சிறுநீர்ப்பையில் கற்கள் உருவாகக் காரணம் - புரதம் மற்றும் பாஸ்பேட் குறைந்த உணவை உட்கொள்வதால்
  114. இரத்த சிவப்பு செல்களில் காணப்படும் நிறமி - ஹீமோகுளோபின்
  115. இரத்தத்தில் இன்சுலின் அளவு குறைவதால் உடலில் சேரும் பொருள் - கீட்டோன்கள்
  116. 51 அமினோ அமிலங்களைக் கொண்ட பாலிபெப்டைடு ஹார்மோன் - இன்சுலின்
  117. மனிதரில் பிளேக் நோயை உண்டாக்கும் பாக்டீரியா - எர்சினியா பெஸ்டிஸ்
  118. கருவுறாத அண்டத்தின் வாழ்நாள் காலம் 12-24 மணி நேரம்
  119. மனித கருப்பையின் உள் அடுக்குச் சுவரின் பெயர் - எண்டோமெட்ரியம்
  120. கரு உணவு முட்டையின் மையத்தில் காணப்படும் முட்டை வகை - சென்ட்ரோலெசித்தல்
  121. கொனிடியங்களை உற்பத்தி செய்யும் அமைப்பு -  பைலைடு
  122. கரும்புச்சாற்றில் உள்ள குளுக்கோசின் சதவீதம் - 30 சதவீதம்
  123. புளோயம் ஒரு கூட்டு திசு
  124. வேரின் புறவெளி அடுக்கு எபிபிளெமா என அழைக்கப்படுகிறது.
  125. நரம்பு செல்லின் நீண்ட கிளைகளற்ற பகுதி ஆக்ஸான் எனப்படும்.
  126. பாரன்கைமா திசு உணவை சேமிக்கின்றது.
  127. கணிகங்கள் குளோரென்கைமாவில் காணப்படுகின்றன.
  128. சல்லடைத் தட்டினைக் கொண்ட திசு - புளோயம்
  129. பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம் - தந்தித் தாவரம்
  130. இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் - ஹீமோகுளோபின்
  131. பறவைகளின் உணவு எங்கு அரைக்கப்படுகிறது - அரைவைப்பை
  132. கரையாத உணவுப் பொருள் கரையும் எளிய பொருளாக மாற்றப்படும் நிகழ்ச்சி - செரித்தல்
  133. தொற்றுத்தாவர வேர்களில் காணப்படும் பஞ்சு போன்ற திசு --- வெலாமன்
  134. மெல்லுடலிகளுக்கு எடுத்துக்காட்டு - ஆக்டோபஸ்
  135. குழியுடலிகளுக்கு எடுத்துக்காட்டு - ஹைட்ரா
  136. சைகஸ் - ஜிம்னோஸ் பெர்ம் வகையைச் சேர்ந்தது.
  137. கிரினெல்லா - சிவப்பு பாசி வகையைச் சேர்ந்தது.
  138. பாரமீசியம் - சீலியோபோரா வகையைச் சேர்ந்தது
  139. எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் மருந்து -  அசிட்டோதையாமிடின் AZT
  140. தாவரத்தின் இனப் பெருக்கத்திற்காக உருவாக்கப்பட்ட பகுதி - பூக்கள்
  141. ஆணி வேரின் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு - பீட்ரூட்
  142. பறக்கும் தன்மையற்ற பறவை - ஆஸ்ட்ரிக்
  143. ஆணி வேர் தொகுப்பு காணப்படும் தாவரம் - புளியமரம்
  144. ஆணி வேர் மாற்றமடைந்திருப்பது - கேரட்
  145. விதையின் எப்பகுதி தண்டாக வளர்கிறது - முளைக்குருத்து
  146. குமிழ்த் தண்டிற்கு எடுத்துக்காட்டு - வெங்காயம்
  147. மலரின் ஆண் பாகம் - மகரந்தத் தூள்
  148. வறண்ட நிலத்தாவரம் - சப்பாத்திக்கள்ளி
  149. தொற்றுத் தாவரம் பற்றி வளரும் தாவரம் ஓம்புயிரி எனப்படும்.
  150. கோலன்கைமா திசுவில் காணப்படுவது - பெக்டின்
  151. தாவர உடல் ஆக்குத்திசு மற்றும் நிலைத்திசு ஆகிய இரு வகை திசுக்களைக் கொண்டுள்ளது.
Read More »
 

Most Reading

Tags

Sidebar One