Search

CBSE பள்ளிகளுக்கு தேர்வுத்துறை சுற்றறிக்கை!!

Thursday 23 January 2020

தேர்வு பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாவிட்டால், பள்ளிகளின் இணைப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, தேர்வு கட்டுப்பாட்டு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


நாடு முழுவதும், சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும், பிளஸ் 2 பொதுத்தேர்வு, பிப்ரவரி, 15 முதல், மார்ச், 30 வரை நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கான ஆயத்த பணிகளை, சி.பி.எஸ்.இ., மேற்கொண்டுள்ளது.


இந்நிலையில், சி.பி.எஸ்.இ.,யின் தேர்வு கட்டுப்பாட்டு துறை சார்பில், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
சி.பி.எஸ்.இ., பொது தேர்வுகளை சுமூகமாக நடத்தவும், விடைத்தாளை மதிப்பிட்டு, உரிய தேதிக்குள் தேர்வு முடிவை அறிவிக்கவும், சி.பி.எஸ்.இ.,யின் தேர்வு கட்டுப்பாட்டு துறைக்கு, பள்ளிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
தேர்வில் முறைகேட்டில் ஈடுபடுவது, சி.பி.எஸ்.இ., உத்தரவுப்படி, தேவையான ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் முதல்வரை தேர்வு பணிக்கு அனுப்பாதது, விடைத்தாள் திருத்த ஆசிரியர்களை அனுப்பாமல் இருப்பது என, ஒவ்வொன்றும் விதிமீறலாக கணக்கில் கொள்ளப்படும். இந்த விதிமீறலின் கீழ், பல வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ள, சி.பி.எஸ்.இ.,க்கு அதிகாரம் உள்ளது.

முதலில் எழுத்துப் பூர்வமாக விளக்க அறிக்கை கேட்கப்படும். பின், ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். சீனியர் செகண்டரி பள்ளியில் இருந்து, செகண்டரி பள்ளியாக தரம் குறைக்கப்படும்.
வகுப்பறைகளில், பிரிவுகளின் எண்ணிக்கை குறைக்கப்படும்.

 பொது தேர்வுக்கு மாணவர்களை அனுப்புவதற்கான தகுதி, இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தப்படும். குறிப்பிட்ட காலத்துக்கு அங்கீகார இணைப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும்.

ஐந்து ஆண்டுகள் வரை, அங்கீகாரத்தை நீட்டிக்க முடியாத அளவுக்கு தடை விதிக்கப்படும். சில பாடங்களுக்கு மட்டும் இணைப்பு அந்தஸ்து நிறுத்தப்படும்; நிரந்தரமாக இணைப்பு அங்கீகாரம் ரத்தாகும். இவ்வாறு, சுற்றறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

Most Reading

Tags

Sidebar One