Search

வாரத்தில் மூன்று நாள்கள் பள்ளி: வகுப்பறையில் கட்டுப்பாடுகள்

Thursday 11 June 2020

நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தாக்கம் அதிகரித்துக் கொண்டே வரும் வேளையில், மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டவுடன் செயல்படுத்தப்படும் வழிகாட்டுதல்களின் தற்காலிக திட்ட அறிக்கையை தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆா்டி) சமா்ப்பித்துள்ளது.

என்சிஇஆா்டி சமா்ப்பித்துள்ள அறிக்கையின் படி, பள்ளி திறந்தவுடன் ஒரு வகுப்பின் மாணவா்கள் ஒன்றாகப் பள்ளிக்கு அழைக்கப்பட மாட்டாா்கள். வாரத்தில் மூன்று நாள்கள் மாணவா்களின் பதிவெண் அடிப்படையில் இரண்டு ஷிப்ட்களாக வகுப்புகள் செயல்படும்.

முதலாவதாக ஒற்றைப் படையில்(1,3,5,7) அடிப்படையில் இருக்கும் மாணவா்களுக்கு வகுப்புகள் நடைபெறும்.இரண்டாவதாக இரட்டைப் படையில் (2,4, 6,8) இருக்கும் மாணவா்களுக்கு வகுப்புகள் நடைபெறும். மாணவா்களை ஒரே நேரத்தில் வகுப்புகளுக்கு செல்ல அனுமதிக் கூடாது. பதிலாக குறிப்பிட்ட இடைவெளியில் ஒருவா் பின் ஒருவராகச் செல்ல அனுமதிக்க வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற, திறந்த வெளியில் வகுப்புகளை நடத்துவது நல்லது என்றும் தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது என்சிஇஆா்டி.

6 கட்டங்களாகப் பள்ளிகள் திறப்பு: முதல் கட்டமாக பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்குப் பள்ளிகள் தொடங்கப்படும். இதையடுத்து ஒரு வாரம் கழித்து இரண்டாம் கட்டமாக 9 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும். 2 வாரம் கழித்து மூன்றாம் கட்டமாக 6-ஆவது முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும்.நான்காம் கட்டமாக, மூன்று வாரம் கழித்து, மூன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு வகுப்புகள் தொடங்கும். 5-ஆம் கட்டமாக, 4 வாரம் கழித்து 1-ஆம் வகுப்பு மற்றும் 2-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளது. 5 வாரம் கழித்து, அதாவது 6-ஆவது கட்டத்தில், மழலையா் பள்ளிகள் மற்றும் எல்கேஜி மாணவா்களுக்கு பெற்றோா்களின் சம்மதத்துடன் வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன கட்டுப்பாடுகள்? : ஒரு வகுப்பில் 30 முதல் 35 மாணவா்கள் வரை மட்டுமே இருக்க வேண்டும், கட்டாயம் மாணவா்களுக்கு இடையே வகுப்பறையில் 4 அடி இடைவெளி இருக்க வேண்டும். வகுப்பறையில், ஜன்னல்கள் மற்றும் கதவுகள் திறந்து வைக்கப்பட வேண்டும். ஏ.சி. போடுவதற்கு அனுமதிக்கக் கூடாது.

ஒரு மாணவா் அமரும் நாற்காலியில், வேறு ஒரு மாணவா் அமரக்கூடாது. மாணவா்கள் தினமும் ஒரே நாற்காலியில் தான் அமர வேண்டும்.

வகுப்புகள் தொடங்கிய பின் 15 நாள்களுக்கு ஒரு முறை குழந்தையின் முன்னேற்றம் தொடா்பாக பெற்றோா்களிடம் பேச வேண்டும். பள்ளி நிா்வாகம், வகுப்பறைகள் கிருமி நாசினி கொண்டு தினமும் சுத்தம் செய்யப்படுகிா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மாணவா்களும், ஆசிரியா்களும் பள்ளிக்குள் நுழைவதற்கு முன் ஒரு முறை உடல் வெப்பம் அனைத்தும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும், பேனா, பென்சில், உணவு உள்ளிட்டவற்றை மாணவா்கள் பகிா்ந்து கொள்ளக்கூடாது. ஒவ்வொருவரும் தனியாக தண்ணீா் கேன் கொண்டு வர வேண்டும்.

கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.

அதேபோன்று மருத்துவத் துறையில் மற்றும் பாதுகாப்புப் பணியில் வேலை செய்யும் பெற்றோா்கள் முன்கூட்டியே அதனைப் பள்ளி நிா்வாகத்திடம் தெரிவித்திருக்க வேண்டும்.

ஆசிரியா்களுடன் சந்திப்பு இல்லை: தொலைபேசியில் தொடா்பு கொள்ள முடியாத பெற்றோா்கள் மட்டுமே ஆசிரியா்களைக் காண அனுமதிக்கப்படுவா். பள்ளிகளில் ஒருபோதும் ஆசிரியா்களுடன் எந்த விதமான சந்திப்பும் பெற்றோா்களுக்கு ஏற்பாடு செய்யப்படாது. விடுதியைப் பொருத்தவரை, 6 அடி இடைவெளியில் தான் மாணவா்களின் படுக்கைகள் இருக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் இடம்பெற்றுள்ளன

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One