Search

'வீட்டிலும் பாதுகாப்புடன் இருங்கள்!' மாணவ, மணவியருக்கு சி.இ.ஓ., 'அட்வைஸ்

Monday 8 June 2020

திருப்பூர்:திருப்பூரில் பத்தாம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கு, முக கவசத்துடன், 'ஹால் டிக்கெட்' நேற்று வழங்கப்பட்டது.பத்தாம் வகுப்பு தேர்வு, ஜூன் 15ல் துவங்கி, 25 வரை நடக்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் கட்டாயம் சமூக இடைவெளி கடைபிடிக்கும் நோக்கில், 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர்.

 பாதுகாப்புக்காக, கட்டாயம், முக கவசம் அணிய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூரில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் நேற்று ஹால்டிக்கெட் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு தலா, 2 முக கவசங்களும் வழங்கப்பட்டது.

ஜெய்வாபாய் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியருக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ்குமார், ஹால்டிக்கெட் வழங்கினார்.மாணவியர் மத்தியில் அவர் பேசியதாவது:ஹால்டிக்கெட்டில் தேர்வு அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளன.

 சந்தேகம் இருந்தால், அதில் குறிப்பிட்டுள்ள, 5 தொலைபேசி எண்களில் ஏதேனும் ஒன்றிற்கு தொடர்பு கொள்ளலாம்.உங்களின் பாதுகாப்புக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்துள்ளோம்.

முக கவசங்கள் தண்ணீரில் நன்றாக அலசி, தேர்வுக்கு வரும் முன் கட்டாயம் அணிந்து வர வேண்டும். இனிவரும் நாளில் கூடுதல் முக கவசமும் வழங்குவோம். வீட்டிலும், உடல் நலத்திற்குரிய பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One