Search

தமிழகத்தில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடக்குமா? ஆராய 11 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு.

Sunday 5 July 2020

தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக சாத்தியக்கூறுகளை ஆராய உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் செமஸ்டர் தேர்வுகளை நடத்தி முடிப்பது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு தேர்வுகள் திட்டமிட்டப்படி  நடைபெறவில்லை.  இந்த நிலையில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா ,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் செமஸ்டர் தேர்வை ரத்து செய்துள்ளன.

மேலும் பல மாநிலங்கள் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

இந்நிலையில்  பல்கலைக்கழக மானியக் குழு இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை மட்டும் ரத்து செய்யலாம் என்கின்ற பரிந்துரையை மத்திய அரசுக்கு அளித்துள்ளது. செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக அந்தந்த மாநிலங்களை முடிவு செய்துகொள்ளலாம் என பல்கலைக்கழக மானியக் குழு மாநிலங்களுக்கு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை முதன்மை செயலாளர் மற்றும் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழு செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையை அரசிடம் அளிக்கும். அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது குறித்து தமிழக அரசு முடிவெடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்லூரிகள் திறக்கப்படும் தேதி  வரும் கல்வியாண்டில் எத்தனை நாட்கள் கல்லூரிகளை நடத்துவது உள்ளிட்ட வழிமுறைகளை பல்கலைக்கழக மானியக்குழு விரைவில்  வெளியிடவுள்ளது.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One