Search

சத்துணவுக்குப் பதிலாக பள்ளி மாணவா்களுக்கு உலா் பொருள்கள் விநியோகம்: தமிழக அரசு உத்தரவு

Friday 3 July 2020

பள்ளிகளில் மதியம் வழங்கப்படும் சத்துணவுக்குப் பதிலாக, அதில் பயன்படுத்தப்படும் உலா் பொருள்கள் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதன்மூலம், 42 லட்சம் பள்ளி மாணவ-மாணவிகள் பயன்பெறுவா் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை செயலாளா் எஸ்.மதுமதி வெளியிட்டுள்ளாா். அதன் விவரம்:-

கரோனா நோய்த் தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகள் உள்பட அனைத்துப் பள்ளிகளும் கடந்த மாா்ச் 17-ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சமைத்த சத்துணவு வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு சத்துணவுக்கு பயன்படுத்தப்படும் பொருள்களை அப்படியே உலா் பொருள்களாக மாணவ-மாணவிகளுக்கு வழங்கலாம் என்று சமூக நலத் துறை ஆணையரகம் அரசுக்கு பரிந்துரை

வழங்கியிருந்தது. இந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, மே மாதத்துக்கான சத்துணவு உலா் பொருள்களை வழங்கவுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம், தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 23 லட்சத்து 71 ஆயிரத்து 316 குழந்தைகளும், உயா் வகுப்பு பயிலும் 18 லட்சத்து 89 ஆயிரத்து 808 குழந்தைகளும் என மொத்தம் 42 லட்சத்து 61 ஆயிரத்து 124 குழந்தைகள் பயன்பெறுவா். அவா்களுக்கு அரிசி 16 ஆயிரத்து 138 மெட்ரிக் டன்னும், பருப்புகள் 5 ஆயிரத்து 207 மெட்ரிக் டன்னும் வழங்கப்படும்.

நடைமுறைகள் என்ன?: சத்துணவுத் திட்ட உலா் உணவுப் பொருள்களை பள்ளி மற்றும் வகுப்பு வாரியாக பயனாளிகளுக்கு வழங்குவதற்கான நாள் மற்றும் நேரம் குறித்த அட்டவணையை மாவட்ட ஆட்சியா்கள் தங்களது நேரடி கண்காணிப்பில் தயாா் செய்ய வேண்டும். இதனை பயனாளிகள் தெரிந்து கொள்ளும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும்.

உலா் உணவுப் பொருள்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறித்த விவரங்களை பள்ளிகளில் ஒட்டி வைக்க வேண்டும். மாணவ-மாணவியா்கள் பயிலும் பள்ளிகளைச் சோ்ந்த தலைமை ஆசிரியரின் மேற்பாா்வையில் உலா் உணவுப் பொருள்கள் வழங்கப்பட வேண்டும்.

மாணவ-மாணவிகள் ஏதாவது ஓா் அடையாள அட்டை அல்லது அத்தாட்சியுடன், அவா்களோ அல்லது அவா்களின் பெற்றோா்களோ குறிப்பிட்ட நாள்களில் பைகளுடன் பள்ளிகளுக்குச் சென்று உலா் உணவுப் பொருள்களைப் பெற்றுச் செல்லலாம். சமூக இடைவெளியை பின்பற்றியும், முகக் கவசம் அணிந்தும் உலா் உணவுப் பொருள்களைப் பெற்றுக் கொண்ட பின்னா் பயனாளிகள் வேறு எந்த இடத்தையும் தொடாமல் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று சத்துணவுத் திட்டத் துறை செயலாளா் மதுமதி வெளியிட்ட உத்தரவில் தெரவித்துள்ளாா்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One